வடமாநிலத்தில் பதுங்கிய அன்பு... அசோக்குமார் தற்கொலை வழக்கை ஊத்தி மூட முயற்சி?
சினிமா தயாரிப்பாளர் அசோக்குமார் தற்கொலை வழக்கை ஊற்றி மூட முயற்சி நடப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அன்பு வெளிநாட்டில் தலைமறைவாக இருந்து கொண்டு சமரசம் பேசி வருகிறாராம்.
Recommended Video
சென்னை: அசோக்குமார் தற்கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள சினிமா பைனான்சியர் அன்பு செழியன் வட இந்தியாவில் பதுங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தற்கொலை செய்து கொண்ட அசோக்குமார் குடும்பத்தினருடன் அன்பு செழியன் சமரசம் பேசி வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அன்புச்செழியனுக்குச் சொந்தமான மேலமாசி வீதியில் கோபுரம் பிலிம்ஸ் அலுவலகம் உள்ளது. இங்குதான் பட விநியோகம், வட்டிக்கொடுத்த பணத்தை வசூல் செய்வது தொடர்பான வேலைகளை செய்து வந்தார்.சென்னை அலுவலகம், மதுரை வீடு ஆகியவற்றில்தான் சினிமா பிரமுகர்களைச் சந்திப்பார் அன்புச்செழியன்.
அரசியல் புள்ளிகளின் பணம் அன்புச்செழியனிடம் இருப்பதாக பலரும் குற்றம் சாட்டுகின்றனர். தங்கள் பணம் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதால் அசோக்குமார் தற்கொலை செய்து கொண்ட வழக்கில் கைது செய்யப்படாமல் அன்புச்செழியனை அரசியல்வாதிகள் பாதுகாக்கிறார்கள் என்ற புகார் எழுந்துள்ளது.
3 தனிப்படை போலீசார் விசாரணை
நடிகர் சசிகுமார் அளித்த புகாரின் பேரில் வளசரவாக்கம் போலீசார் முதல்கட்டமாக அன்புசெழியன் மீது தற்கொலைக்கு தூண்டியதாக வழக்கு பதிவு செய்தனர். போலீசார் 3 தனிப்படைகள் அமைத்து தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர். ஒரு பிரிவினர் மதுரைக்கும், மற்றொரு பிரிவினர் ராமநாதபுரத்துக்கும் சென்று அன்புசெழியனை தீவிரமாக தேடினர்.
வடமாநிலத்தில் பதுங்கல்
போலீசார் தேடுவதை அறிந்த அன்புசெழியன் தலைமறைவாகி உள்ளார். அன்புச்செழியன் வட மாநிலத்தில் பாதுகாப்பாக பதுங்கியுள்ளதாகவும் கைது நடவடிக்கைக்கு முன்பாகவே அவர் முன்ஜாமீன் பெற்றுவிடுவார் என்றும் கூறுகிறார்கள்.
2011ல் அன்பு கைது
அன்புச்செழியன் மீது சினிமா தயாரிப்பாளர் தங்க ராசு புகார் கொடுத்தபோது நடவடிக்கை எடுக்கக்கூடாது என்று நெருக்கடிகள் வந்தன. அப்போதைய மதுரை மாவட்ட எஸ்.பி அஸ்ரா கர்க், 30.11.2011ஆம் தேதி நள்ளிரவு 12 மணிக்கு அன்புச்செழியனை அழைத்துச் சென்று அதிகாலை 6 மணிக்கே மாஜிஸ்திரேட் வீட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தார்.
அஸ்ரா கார்க் டிரான்ஸ்பர்
அவர் மீது ஆயுதங்களைக் காட்டி கொலை மிரட்டல் விடுத்தல், கந்துவட்டி தடைச்சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின்கீழ் வழக்கு பதியப்பட்டது. மேலிட நெருக்கடியினால் அஸ்ரா கர்க் பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இதன் பிறகு, அன்புச்செழியன் மீதான நடவடிக்கை தொய்வடைந்தது.
சமரச முயற்சி
புகார் கொடுத்த தயாரிப்பாளருடன் அன்புச்செழியன் சமரசம் செய்துகொண்டதாலும் 23.10.13 அன்று அந்த வழக்கை ஊத்தி மூடப்பட்டது. தற்போதும் அசோக்குமார் குடும்பத்தினருடன் அதுபோன்ற பேச்சுகள் நடப்பதாக கூறப்படுகிறது.
அத்தை மகன் அசோக்குமார்
அன்புச்செழியனால் பாதிக்கப்பட்டவர்கள் நிறைய பேர் இருந்தாலும் சசிகுமார் துணிந்து புகார் கொடுத்துள்ளதற்கு அவரது குடும்பப் பின்னணியே காரணம் என்கிறார்கள்.
இறந்த அசோக்குமார், சசிகுமாரின் சொந்த அத்தை மகன் மட்டுமல்ல, சசிகுமாரின் தங்கை வனிதாவைத்தான் திருமணம் செய்துள்ளார்.
சொத்துக்கள் அதிகம்
மதுரை முன்னாள் காங்கிரஸ் எம்எல்ஏ தெய்வநாயகத்தின் சொந்த தம்பி பாலகிருஷ்ணனின் மகன்தான் அசோக்குமார். புதுதாமரைப்பட்டியில் ஏராளமான சொத்துகள், ஒத்தக்கடையில் தியேட்டர், மதுரையிலும் வீடு என்று வசதியாகவும், பலமான நட்பு வட்டாரமும் சசிகுமாருக்கு இருக்கிறது.
பணப்பரிமாற்றம்
சென்னையில் இருந்து வந்த தனிப்படை போலீஸார் விசாரணை மட்டும் நடத்திச் சென்றுள்ளனர். ஆனால் அசோக்குமாருக்கும் அன்புச்செழியனுக்கும் இடையே நேரடியாக பணப் பரிமாற்றம் நடந்ததற்கான ஆதாரங்களோ, பதிவு செய்யப்பட்ட செல்போன் உரையாடலோ இல்லை என்று கூறப்படுகிறது.
அன்புவிற்கு ஆதரவாக போலீஸ்
காவல்துறையினரும் அன்புச்செழியனுக்கே ஆதரவாக இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. முதல்வர் நேரடியாகத் தலையிட்டு உத்தரவிடாவிட்டால் அன்புச்செழியன் கைது செய்யப்படும் வாய்ப்பு குறைவு என்கிறார்கள் அசோக்குமாரின் குடும்பத்தினர்.
சசிகுமார் நேரில் விளக்கம்
அதே நேரத்தில் சசிகுமார் தரப்பினர் சரியான ஒத்துழைப்பு கொடுக்காததால் தலைமறைவாக உள்ள அன்புசெழியனை பிடிப்பதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர். வளசரவாக்கம் காவல்நிலையத்தில் திங்கட்கிழமை நேரில் ஆஜராகி நடந்த சம்பவம் பற்றி விளக்கம் தர போலீசார் உத்தரவிட்டுள்ளனர்.