நீங்க "அஞ்சாநெஞ்சர்"தானே.. உங்க தம்பிதானே ஸ்டாலின்.. நேரில் போய் பேசலாமே...!
தன்னை கட்சியில் சேர்த்து கொள்ளும்படி அழகிரி தெரிவித்துள்ளார்.
சென்னை: குப்புற விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டாத கதைதான் அழகிரி கதையும்.
திமுகவில் தன்னை சேர்த்துக் கொண்டால் ஸ்டாலினை தலைவராக ஏற்றுக்கொள்ள தயார் என்றும் கட்சியில் சேர்வது என்றாலே அவரை தலைவராக ஏற்றுகொள்வதுதான். தான் கட்சியில் சேர எந்த விதமான கோரிக்கையும் வைக்கவில்லை என்றும் கூறியிருக்கிறார்.
ஏன் முன்னமே சொல்லல?
பொதுக்குழு நடந்து முடிந்து 3 நாள் கழித்து இப்போது பேட்டி கொடுக்கிறார். ஏன் பொதுக்குழு அன்றிலிருந்து கட்சியில் மீண்டும் சேர்த்து கொள்வது பற்றி பேசவில்லை? பொதுக்குழுவுக்கு முன்னமேயே இந்த கருத்தை இவர் சொல்லியிருக்கலாமே?
கூட பிறந்த தம்பிதானே?
சரி, இப்போது சொல்லும் இந்த செய்தியை, கட்சித் தலைவரிடமே நேரிடையாகவே சொல்லலாமே? கூட பிறந்த தம்பிதானே? மீடியாவை கூப்பிட்டு சொல்ல காரணம் என்ன? தன் தரப்பு தகவலை தெரிவித்துவிட்டு ஆழம் பார்க்கிகிறாரா?
3 நாளில் என்ன மாற்றம்?
ஏற்கனவே அழகிரியை கட்சிக்குள் சேர்க்க வேண்டாம் என்று மூத்த தலைவர்கள் சொல்லிவிட்டார்கள். இது அழகிரிக்கும் தெரியும். அதன்பிறகுதான் பொதுக்குழுவே நடந்தது. இப்போது இந்த 3 நாளைக்குள் என்ன மாதிரியான மாற்றம் அழகிரிக்கு வந்துவிட்டது? எதற்காக மீண்டும் கட்சிக்குள் அவரை சேர்க்க முன்வருவார்கள்?
முழுக்க ஈகோதான்
அழகிரியின் பேச்சில் இரண்டு விஷயம் புலப்படுகிறது. முதலாவதாவதாக ஈகோ. ஒட்டுமொத்த ஈகோவையும் குத்தகைக்கு எடுத்து வைத்து கொண்டிருப்பதை இன்னமும் கூட கைவிடவில்லை என தெரிகிறது. அதனால்தான் ஸ்டாலினை நேருக்கு நேர் சந்தித்து பேச தயங்குவது போல் உள்ளது. அதன் முடிவுதான் இப்படி மீடியாவை கூப்பிட்டு தகவலை சொல்வது.
இன்னமும் மிரட்டலா?
இரண்டாவது விஷயம், இன்னமும் தன் மிரட்டல் தொனியை அழகிரி கைவிடவில்லை. தன்னிடம்தான் ஆதரவாளர்கள் இருக்கிறார்கள் என்றும், பேரணிக்கு பிறகு என் பலம் தெரியும் என்றெல்லாம் சொல்லிக் கொண்டிருக்கிறார். பொதுக்குழுவே நடந்து முடிந்த பிறகும் ஏன் இப்படி சொல்கிறார் என தெரியவில்லை. தனக்கு பலம் இருப்பதாக காட்டி, மிரட்டி, அதன்மூலம் கட்சியில் சேர்ந்துவிடலாம் என்று நினைக்கிறார்.
ஈகோ + மிரட்டல்
அதனால் இன்று அழகிரி மீடியாவிடம் சொல்லியிருப்பது வழக்கம்போல் மிரட்டலை தவிர வேறில்லை. உண்மையில் சமாதானத்திற்கு உடன்பட்டிருந்தால், அவர் நேரிடையாக ஸ்டாலினை பார்த்து பேசியிருப்பார், விஷயமும் முடிந்திருக்கும். அதனால் வறட்டு ஈகோவையும், மிரட்டல் தொனியையும் ஒட்டுமொத்தமாக கழட்டிவிட்டால்தான் அழகிரி திமுகவில் மட்டுமில்லை... எந்த கட்சியிலேயும் இணைய முடியும்`!