மழை நிவாரணத்திற்கு ஐஏஎஸ் அதிகாரி குழுக்களை நியமித்தீர்களே... பணியாற்ற ஊழியர்கள் இருக்கிறார்களா?
சென்னையில் மழை தொடர்பான உதவிக்காக 15 ஐஏஎஸ் அதிகாரிகள் குழு நியமிக்கப்பட்டன. ஆனால் களத்தில் இறங்கி வேலை செய்ய மாநகராட்சியில் ஊழியர்கள் இல்லை என்ற நிலை தான் உள்ளது.
Recommended Video
சென்னை : சென்னையில் மழை தொடர்பான உதவிக்காக ஐஏஎஸ் அதிகாரிகள் தலைமையில் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன. ஆனால் களத்தில் இறங்கி வேலை செய்ய மாநகராட்சியில் ஊழியர்கள் இல்லை என்ற நிலை தான் உள்ளது.
வடகிழக்குப் பருவமழை தொடர்பான பாதிப்புகள் குறித்து புகார் தெரிவிக்க சென்னை மாநகராட்சியின் 15 மண்டலங்களுக்கும் ஐஏஎஸ் அதிகாரிகள் தலைமையில் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதிகாரிகளை தொடர்பு கொள்ள வசதியாக உதவி எண்களும் அறிவிக்கப்பட்டன. ஆனால் இந்த எண்களை பெரும்பாலான நேரங்களில் அதிகாரிகளை அட்டென்ட் செய்வதே இல்லை என்று மக்கள் புகார் கூறுகின்றனர்.
இந்நிலையில் மாநகராட்சியில் மீட்புப் பணிக்காக எத்தனை ஊழியர்கள் இருக்கிறார்கள் என்பது தொடர்பாக தமிழ் ஒன் இந்தியாவிடம் ஊழியர் சங்கத்தை சேர்ந்தவர் பகிர்ந்து கொண்ட சில தகவல்கள் : சென்னை மாநகராட்சியில் மழை நிவாரணப் பணிக்காக அதிகாரிகள் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன, ஆனால் களத்தில் இறங்கி பணியாற்ற போதுமான ஊழியர்கள் இல்லையாம்.
600 தெருக்களுக்கு 500 ஊழியர்கள் மட்டுமே
சென்னையில் மொத்தம் 15 மண்டலங்கள் உள்ளன. இவற்றில் ஒவ்வொரு மண்டலத்திற்கும் 100 முதல் 150 டிவிஷன்கள் வரை உள்ளன. ஒவ்வொரு டிவிஷனுக்கும் 5 ஊழியர்கள் மட்டுமே உள்ளன, அப்படி பார்த்தால் ஒரு மண்டலத்திற்கு 500 முதல் 600 ஊழியர்கள் மட்டுமே உள்ளனர்.
சாலைப் பணியாளர்கள் இல்லை
ஒவ்வொரு டிவிஷனுக்கும் 120 தெருக்கள் வரை இருக்கின்றன. ஆனால் இவற்றிற்கு 5 ஊழியர்கள் மட்டுமே எப்படி பணியாற்றி மழை பாதிப்புகளை சரி செய்ய முடியும் என்பது தான் அவருடைய கேள்வி. ஐஏஎஸ் அதிகாரிகள் வந்து பாதிப்பை ஆய்வு செய்துவிட்டுத் தான் போவார்கள் சாலைப்பணி செய்யும் ஊழியர்கள் இருந்தால் தான் வடிகால்வாய்களில் ஏற்பட்டிருக்கும் அடைப்புகளை சரி செய்ய முடியும்.
சிரமத்தில் மாநராட்சி ஊழியர்கள்
ஊழியர்கள் பற்றாக்குறையால் தற்போது மலேரியா பணிக்காக ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட்ட ஊழியர்களும் மழை பாதிப்புப் பணியில் ஈடுபடுத்தப்படுகின்றன என்று மாநகராட்சி ஊழியர்கள் தெரிவிக்கின்றனர். மிகுந்த சிரமத்திற்கு மத்தியிலேயே மாநகராட்சி ஊழியர்கள் மழை நிவாரணப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
வண்டல் அள்ளப்படவில்லை
இதே போன்று மழைநீர்வடியாமல் போனதற்கு முக்கிய காரணம் வடிகால் வாரியம் உரிய நடவடிக்கை எடுக்காததும் என்கின்றார் ஊழியர் சங்கத்தை சேர்ந்தவர். கோடை காலத்தில் எல்லாம் சும்மா இருந்துவிட்டு வடிகால் வாரியத்தினர் மழை தொடங்கிய பின்னர் தான் வடிகால்வாய் வழிகளில் இருக்கும் தூரை அள்ளுகின்றனர்.
புறநகரிலும் இதே நிலை தான்
இதனால் எந்தப் பிரயோஜனமும் இல்லை, மீண்டும் மழை தொடங்கினால் அந்த வண்டல்கள் மீண்டும் அதே பாதையில் சென்று அடைத்துக் கொள்வதால் கனமழை பெய்யும் போது அவற்றை மழைநீர் ஓட வழியின்றி சாலையில் தேங்கி நிற்பதாகக் கூறுகிறார். ஆனால் கனமழையால் சென்னை நகரம் பெரிய அளவில் பாதிப்பில்லாவிட்டாலும், புறநகர்ப் பகுதியே மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. அங்கும் ஊழியர்கள் பற்றாக்குறையே நிவாரணப் பணிகள் சுணக்கத்திற்குக் காரணம்.