சாத்தியமா.. சாதிகள் இல்லாமல் கட்சிகள்.. சாதி கட்சிகள் இல்லாமல் கூட்டணி.. அதிர வைக்கும் போல் ரிசல்ட்!
சாதி கட்சிகள் இல்லாமல் தேர்தல் கூட்டணி சாத்தியமா?
சென்னை: சாதி கட்சிகளே இல்லாமல் தமிழகத்தில் தேர்தல் சாத்தியமாகுமா? அதற்கான நிர்ப்பந்தம், சூழலை காலம் உருவாக்குமா? அப்படி ஒரு சாதி அரசியலை சந்திக்காத தேர்தலை நம் இளைய சமுதாயத்திற்கு வருங்காலத்தில் சுட்டிக்காட்ட இயலுமா? என்று பல கேள்விகள் எழுகின்றன.
அரசியல் கட்சிகள் ஒவ்வொரு காலக்கட்டத்திலும் ஒவ்வொரு வடிவங்களை பெறுகின்றன... மக்களின் விருப்பத்திற்காக அல்லது ஒரு வரலாற்று தேவையாக அரசியல் கட்சிகள் உருவாகின்றன... ஆனால், இவைகளில், ஒரு சில கட்சிகள் மட்டுமே கொள்கை என்ற வரையறைக்குள் இயங்கி வருகின்றன.
சில கட்சிகள் சமூக ரீதியிலான தங்கள் அடையாளத்தை எதிர்பார்க்கின்றன... அதிகாரம் வழியாக அங்கீகாரம் பெற முயல்கின்றன.. அவைகள்தான் சாதி கட்சிகள்.. தமிழ்நாட்டை, உண்மையிலேயே திராவிடத்தின் பெயரில் ஆண்டு கொண்டிருப்பது சாதி கட்சிகள்தான்.
சாதி கட்சிகள்
இந்த சாதி கட்சிகள்தான் அரசியலின் பின்புலம் என்றும் சொல்லலாம், அல்லது அரசியல் ஊக்கி என்றும் சொல்லலாம்! இந்து அடையாளமும் சாதியும் இணை பிரியாதவை என்பதுதான் உண்மை... சிறுபான்மையால் வலுவான, கருத்தியல் தளத்தில் கோலூன்ற முடியவில்லை.. அரசியல் களத்தையும் கெட்டிப்படுத்த முடியவில்லை.. அதனால்தான், திராவிடத்தின் பிடியில் நகர்ந்து வருகிறது.
இந்துத்துவா
சாதி கட்சிகள் இல்லாமல் தமிழகத்தில் ஒன்றும் வேலைக்கு ஆகாது என்று இந்துத்துவா கட்சிகளே தற்போது புரிந்து கொண்டுள்ளன.. அதனால்தான், பெரிய கட்சிகளைவிட, சாதி கட்சிகளை வளைத்து போட ஆர்வம் காட்டுகிறார்கள்... மகளிரணியினரை தங்கள் கட்சிக்குக் கொண்டுவரும் அசைன்மெண்ட்டை சசிகலா புஷ்பாவிடம் பாஜக தந்ததாக ஒரு செய்தி வெளிவந்தது... குறிப்பாக நாடார், வன்னியர், முத்தரையர் உள்ளிட்ட சமூக பெண்களை ஒருங்கிணைக்கும்படி அவர் கேட்டுக் கொள்ளப்பட்டிருக்கிறார் என்றும், முதல்வர் எடப்பாடியின் தொகுதிக்குள் நாடார் சமூக வாக்காளர்கள் 40ஆயிரம் பேர்வரை இருப்பதை சுட்டிக்காட்டி, முதலில் அங்கே இருந்து களப்பணியை ஆரம்பிக்கும்படியும் பாஜக ஸ்கெட்ச் போட்டு தந்ததாகவும் சலசலக்கப்பட்டது.
சாத்தியமா?
இதேபோல, ரஜினிகாந்த் கட்சி ஆரம்பிக்க உள்ளதால், முதல்கட்டமாக சாதி கட்சிகளை ஒன்றுதிரட்டி, தன்பக்கம் இழுத்து கொள்ளும் முயற்சி நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது.. ஆக... தேசிய கட்சி முதல், இன்னும் ஆரம்பிக்காத கட்சி வரை.. எல்லோர் குறியும் சாதி கட்சிகள்தான்! அந்த வகையில், வரும் சட்டமன்ற தேர்தலிலும் சாதி கட்சிகளின் ஆதிக்கம்தான் தலைதூக்குமா? சாதி கட்சிகளே இல்லாமல் தேர்தலை சந்திக்க முடியாதா? என்ற கேள்வி எழுகிறது... இதை நம் வாசகர்களிடமே கருத்து கணிப்பாகவும் கேட்கப்பட்டது..
வாய்ப்பே இல்லை
"சாதி கட்சிகள் இல்லாத கூட்டணிக்கு தமிழகத்தில் வாய்ப்புண்டா?" என்ற கேள்விக்கு என்ன ஆச்சரியம், "வாய்ப்பே இல்லை" என்று 52.43 சதவீதம் பேர் தெரிவித்துள்ளனர்.. "சாதி ஒழிந்தால்தான் உண்டு" என்று 15.65 சதவீதம் பேரும், "கட்சிகள் சாதிகளை ஒழிக்காது" என்று 18.56 சதவீதம் பேரும், "கனவில்தான் சாத்தியம்" என்று 13.36 சதவீதம் பேரும் தெரிவித்துள்ளனர்.
வாக்கு வங்கி
கிட்டத்தட்ட இந்த ஆப்ஷன்கள் எல்லாமே ஒரே மாதிரியாகவே எடுத்து கொள்ளலாம்.. பெரும்பாலான அரசியல் கட்சிகள், சாதிய பின்புலத்தின் தான் இயங்கி வருகின்றன என்பதும், பல மதங்களை சார்ந்த தலைவர்களும், தாங்கள் சார்ந்த மதத்தின் பின்னணியில், அந்த வாக்கு வங்கியை வைத்துதான் அரசியல் களத்தை நகர்த்த முடியும் என்பதையும் இந்த வாக்கு பதிவு எடுத்துக்காட்டுகிறது.. சாதிகள் இல்லையடி பாப்பா என்ற வாசகம்.... உண்மையில் நடைமுறையில் இல்லவே இல்லை.. சாதிகளை, சாதியப் பாகுபாடுகளை இத்தனை காலமாக கட்சிகள் ஒழிக்காமல் நீரூற்றி வளர்த்து வந்துள்ளதையே இது காட்டுகிறது என்பது தெளிவு.