தப்பு கணக்கு போடுகிறாரா தினகரன்?முதலில் பழனிசாமி, இப்போது தனபால் அடுத்தடுத்து அதிர்ச்சிகள்!
முதல்வர் பழனிசாமியை தூக்கிவிட்டு அடுத்த முதல்வராக சபாநாயகர் தனபால் முன்நிறுத்தப்பட்ட நிலைய்யில் அவரே 18 எம்எல்ஏக்களை தகுதி நீக்கி நடவடிக்கை எடுத்துள்ளது தினகரனுக்கு அடுத்த அடியைத் தந்துள்ளது.
சென்னை : டிடிவி தினகரன் தரப்பு பழனிசாமியை முதல்வராக நியமித்தோம் அவர் துரோகம் செய்துவிட்டார் என்று புலம்பிய நிலையில், அடுத்த முதல்வராக்க நினைத்த சபாநாயகர் தனபாலும்எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்து அதிர்ச்சி கொடுத்துள்ளார்.
சசிகலா முதல்வராவதற்கான ஏற்பாடுகள் நடந்த நிலையில் சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை உறுதியானதால், முதல்வர் பதவிக்கு பழனிசாமியை தேர்ந்தெடுத்தார் சசிகலா. பழனிசாமி தாங்கள் அளிக்கும் உத்தரவுகளை ஏற்று செயல்படுவார் என்று அவரை முதல்வராக நியமித்தார் சசிகலா.
முதல்வராக பழனிசாமி பொறுப்பேற்றது முதல் 2 மாதங்கள் சசிகலாவிற்கு ஆதரவாகவே செயல்பட்டு வந்தார். ஆனால் ஏப்ரல் மாதத்திற்கு பிறகு காட்சிகள் மாற ஆரம்பித்தன. கட்சிக்கும் ஆட்சிக்கும் தானே தலைமை என்ற ரீதியில் செயல்படத் தொடங்கினார் பழனிசாமி.
அதிர வைத்த பழனிசாமி
முதல்வர் பழனிசாமி கொடுத்த அதிர்ச்சி வைத்தியங்களால் ஆடிப்போனார் தினகரன். நாங்கள் கை காட்டிய பழனிசாமி எங்களையே பழி வாங்கிவிட்டார், அவர் யாருக்கு பயப்படுகிறார் என்று கேட்டு வந்தார் தினகரன்.
நீக்க அறிவிப்பு
முதலில் தினகரன் கட்சியில் இருந்து நீக்கியதாக அறிவித்தார். பின்னர் சசிகலாவிற்கு அளித்த பொதுச்செயலாளர் பதவி பறிக்கப்படுவதாக பொதுக்குழுவை கூட்டி அறிவித்தார்.
சட்டம் ஒன்றே கடைசி
கட்சியிலும் சரி, ஆட்சியிலும் சரி தானும், ஓ.பன்னீர்செல்வமும் எடுப்பது தான் இறுதி முடிவு என்ற தோற்றத்தை கொண்டு வந்துவிட்டார் பழனிசாமி. தினகரன் தரப்பினருக்கான அனைத்து கதவுகளும் அடைக்கப்பட்ட நிலையில் சட்டம் என்னும் ஒன்றையே அவர்கள் தற்போது நம்பியுள்ளனர்.
தனபாலை முதல்வராக்க முயன்றவர்கள்
முதல்வர் பழனிசாமி கைவிட்ட நிலையில் அடுத்த முதல்வராக மூத்த அரசியல்வாதி, எந்த அணிக்கும் சார்பு இல்லாதவர் என்று தினகரன் அணி தேர்வு செய்தது சபாநாயகர் தனபாலைத் தான். சசிகலாவின் சகோதரர் திவாகரனும், தினகரன் ஆதரவு எம்எல்ஏக்களும் சபாநாயகர் தனபால் தான் முதல்வராக வேண்டும் என்று கூறி வந்தனர்.
தப்பு கணக்கு
சபாநாயகர் தனபால் தங்கள் தரப்புக்கு ஆதரவாக செயல்படுவார் என்று கருதி அவர்கள் இப்படி ஒரு முடிவை எடுத்து அறிவித்தனர். ஆனால் அவர்களின் கணக்கு தப்பு என்பதை இப்போதே நிரூபித்துவிட்டார் சபாநாயகர். 18 எம்எல்ஏக்கள் மீது கட்சித் தாவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்து அவர்களை தகுதி நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.
அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி
அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சியாக தினகரன் அணியினர் தேர்வு செய்யும் ஒவ்வொருவருமே இவர்கள் பின்னங்கால் பிடறியில் அடித்து ஓடும் வகையிலான நடவடிக்கைகளையே எடுத்து வருகின்றனர். இதனால் யாரை நம்புவது என்ற குழப்பத்தில் உள்ளனர் டிடிவி தினகரன் தரப்பினர் என்பது மட்டும் தெள்ளத் தெளிவாக தெரிகிறது.