எல்லாமே நடிப்பாமே கோப்பால்..???
சென்னை: தினகரன் ஒதுங்கி விட்டார் என்று கூறியது எல்லாம் திட்டமிட்ட நாடகமா என்ற கேள்வி வலுத்துள்ளது. காரணம், ஓ.பி.எஸ் அணி இன்று வைத்துள்ள குற்றச்சாட்டுகள்.
அதிமுகவிலிருந்து ஒதுங்குவதாக டிவிட்டரில் கூறினார் தினகரன். ஜெயக்குமாரும் அதையே தெரிவித்தார். இதையடுத்து ஓ.பி.எஸ் அளித்த பேட்டியில் தர்மயுத்தம் வென்றது என்றார்.
ஆனால் திடீரென இன்று செய்தியாளர்களைச் சந்தித்த ஓ.பி.எஸ் அணியின் கே.பி.முனுசாமி, சசிகலா அணியை திட்டித் தீர்த்து விட்டார். சரமாரியாக விமர்சித்தார்.
மாறி மாறி பேச்சு
கே.பி.முனுசாமியின் பேச்சின்போது மாறி மாறி பேசுகிறது எடப்பாடி அரசு. மதிப்பே இல்லாத தம்பிதுரையும், தான்தோன்றித்தனமாக பேசும் ஜெயக்குமாரும் என்று இருவரையும் வெளுத்து வாங்கி விட்டார்.
நாடகமா?
மேலும் நடராஜன் மறைமுகமாக நாடகமாடி வருகிறார். அவரது நோக்கம் தினகரனை விரட்டுவது. அதற்கு எடப்பாடி குரூப்பை பயன்படுத்துகிறார். இவர்கள் எங்களை ஏமாற்றப் பார்க்கிறார்கள் என்றும் கூறியுள்ளார் கே.பி.எம்.
தினகரனே நாடகமாடுகிறாரா?
மறுபக்கம் நடிகர் ரித்தீஷ் கூறுகையில் தினகரன் ஒதுங்கித்தான் இருக்கிறார். கட்சியை விட்டு போகவே இல்லையே. தினகரனும், சசிகலாவும் இல்லாத அதிமுகவே கிடையாது என்று கூறியுள்ளார். இதைப் பார்க்கும்போது தினகரனே நாடகமாடுகிறாரோ என்ற குழப்பம் எழுந்துள்ளது.
சின்னத்தை வாங்கவும்.. தப்பிக்கவும்
இரட்டை இலை சின்னத்தைப் பெறவும், தன் மீது வழக்குகள் பாய்வதைத் தடுக்கவும், மிடாஸ் உள்ளிட்ட பல்வேறு பிசினஸ்கள் பாதிக்கப்படாமல் பார்த்துக் கொள்ளும் வகையிலும்தான் ஒதுங்கிக் கொள்வதாக கூறி தினகரன் நாடகமாடுவதாக பலரும் கூற ஆரம்பித்துள்ளனர்.
சறுக்கிய ஓ.பி.எஸ்.. சுதாரித்த தலைவர்கள்
தினகரன் ஒதுங்கியது ஓ.பி.எஸ்ஸுக்கு ஓகேதான். ஆனால் அவருடன் இருக்கும் பிறருக்குத்தான் அதில் திருப்தியில்லை. எங்கே. ஓ.பி.எஸ் மட்டும் பலன் அடைந்து விட்டு நம்மை திராட்டி விட்டு விடுவாரோ என்ற அச்சம் அவர்களுக்கு. அதனால்தான் இன்று ஊரைக் கூட்டி சங்கை ஊதி விட்டனர்.
இன்னும் இந்தக் காது என்னவெல்லாம் கேட்கணுமோ.. இந்தக் கண்கள் என்னவெல்லாம் பார்க்க வேண்டுமோ.. காத்திருப்போம்.