சட்டசபை தேர்தலை போல கோட்டைவிட தயாரில்லை திமுக.. உள்ளாட்சி தேர்தலில் காங்கிரசுக்கு மிக்சர்தான்!
சென்னை: சட்டசபை தேர்தலில் திமுக, காங்கிரஸ் ஆகிய கட்சிகளுக்கு இடையே ஏற்பட்ட கூட்டணி உள்ளாட்சித் தேர்தலிலும் தொடருமா என்ற கேள்விக்குறி எழுந்துள்ளது.
கடந்த 2016-ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் அதிமுக 227 இடங்களில் போட்டியிட்டது. மீதமுள்ள தொகுதிகளில் இரட்டை சின்னத்திலேயே போட்டியிட வேண்டும் என்ற நிபந்தனையின்பேரில் உதிரி கட்சிகள் போட்டியிட்டன.
திமுகவும், காங்கிரஸும் கூட்டணி அமைத்து போட்டியிட முடிவு செய்தது.பல கட்ட பேச்சுவார்த்தைகளுக்குப் பின்னர் தங்களுக்கு அதிக தொகுதிகளை ஒதுக்கும்படி காங்கிரஸ் கோரியது. அதன்பேரில் காங்கிரஸ் கட்சிக்கு 41 இடங்களும், உதிரி கட்சிகளுக்கு சில இடங்களையும் அளித்த திமுக 176 இடங்களில் போட்டியிட்டது.
தேர்தல் முடிவுகள்
தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில் அதிமுக போட்டியிட்ட 227 இடங்களில் அதிமுக 136 இடங்களில் வெற்றி வெற்று ஆட்சியை இரண்டாவது முறையாக தக்க வைத்து கொண்டது. ஆனால் காங்கிரஸ் கட்சி வெறும் 8 இடங்களிலும், திமுக 89 இடங்களிலும் மட்டுமே வெற்றி பெற்றது.
நூலிழையில் வெற்றி வாய்ப்பை இழந்த திமுக
மொத்தம் பதிவான வாக்குகளில் வெற்றி பெற்ற அதிமுக 41 சதவீதமும், திமுக 40 சதவீதம் பெற்று நூலிழையில் தோற்றது. இலங்கையில் தமிழர்கள் கொல்லப்படுவது குறித்து மத்தியில் ஆண்ட காங்கிரஸ் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் இலங்கை அதிபராக இருந்த ராஜபட்சவுடன் சோனியா தரப்பு நட்பு பாராட்டியதும் பொதுமக்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது. 2ஜி, நிலக்கரி ஊழல், ஆதர்ஷ் குடியிருப்பு ஊழல் உள்ளிட்டவற்றில் காங்கிரஸ் மீது மக்களுக்கு அதிருப்தி நிலவியது.
அதிமுகவின் மீதும் அதிருப்தி
கடந்த 2011-16-ஆம் ஆண்டு அதிமுக ஆட்சிக்கு வந்தபோது மின்சாரக் கட்டணத்தையும், பஸ் கட்டணத்தையும், பால் கட்டணத்தையும் பல மடங்கு உயர்த்தியது. மேலும் ஆவின் பால் முறைகேடு உள்ளிட்டவற்றால் அக்கட்சிக்கு கடந்த 2016-ஆம் ஆண்டு தேர்தலில் தோற்கும் என்று நம்பப்பட்டது. இதனால் திமுகவுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கும் என்றும் நம்பப்பட்டது.
காங்கிரஸால்தான்
இந்த நிலையில் காங்கிரஸ் மீதிருந்த அதிருப்தியால் 41 இடங்களில் போட்டியிட்ட அக்கட்சிக்கு வெறும் 8 இடங்களே கிடைத்தன. வாக்கு சதவீத அடிப்படையில் அதிமுகவுக்கும், திமுகவுக்கும் வெறும் 1 சதவீத வாக்கு வித்தியாசம்தான் இருந்தது. இதனால் காங்கிரஸுக்கு குறைவான இடங்களை ஒதுக்கி, அந்த இடங்களில் திமுக போட்டியிருக்கலாம் என்று திமுகவினர் பரவலாக பேசினர்.
உள்ளாட்சித் தேர்தல்
தற்போது ஆளும் அதிமுகவில் சசிகலா அணி, ஓபிஎஸ் அணி, தீபா அணி என்று பிளவுபட்டுள்ளதால அதிமுகவின் வாக்குகளை அறுவடை செய்ய திமுக எதிர்நோக்கி காத்திருக்கிறது. சட்டசபை கனவுதான் நிறைவேறவில்லை, அதிமுகவின் பிளவை தங்களுக்கு சாதமாக்கி உள்ளாட்சித் தேர்தலில் திமுக பெரும்பான்மை பெற்று மாநகராட்சி, நகராட்சிகளையாவது தங்கள் வசம் வைத்துக் கொள்ளலாம் என்று கணக்கு போடுகிறது.
2 சதவீத இடங்கள் மட்டும்
சட்டசபை தேர்தலை போல் காங்கிரஸுக்கு அதிக இடங்களைக் கொடுத்து நூலிழையில் வெற்றி வாய்ப்புகளை இழக்க விரும்பாத திமுக, மே மாதம் நடைபெறவுள்ள உள்ளாட்சித் தேர்தலில் 2 சதவீத இடங்கள் மட்டுமே காங்கிரஸுக்கு அளிக்க திட்டமிட்டுள்ளது.
தலைவர் மீது அதிருப்தி
காங்கிரஸ் கட்சி என்றால் அதில் கோஷ்டி சண்டை இல்லாமல் இருக்காது என்றளவுக்கு தமிழக காங்கிரஸ் தனித்தனி அணிகளாக செயல்பட்டு வருகின்றனர். இதனால் கட்சி தமிழகத்தில் காலூன்றவில்லை. இநத கோஷ்டி மோதலால் காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனை நீக்கிவிட்டு, எந்த அணியையும் சாராத திருநாவுக்கரசர் தலைவராக நியமிக்கப்பட்டார்.
விரிசல் எழுந்துள்ளது
தி.மு.க வுக்கும், திருநாவுக்கரசருக்கும் ஒரு இணக்கமான போக்கு ஏற்படவில்லை. பல போராட்டங்களில் தி.மு.க.வின் நிலைப்பாட்டுக்கு எதிரான நிலைப்பாட்டை திருநாவுக்கரசர் மேற்கொண்டது தி.மு.கவை அதிருப்தி அடைய வைத்தது. கூட்டணியில் இருந்து கொண்டே கூட்டணிக்கு ஆதரவாக செயல்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. இதனால் தி.மு.க- காங்கிரஸ் உறவில் விரிசல் விழுந்தது.
நம்பிக்கை வாக்கெடுப்பிலும் குழப்பம்
சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு வந்த போது எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக வாக்களிப்பது என்று தி.மு.க திட்டவட்டமாக தெரிவித்தது. ஆனால் காங்கிரஸ் முடிவை அறிவிப்பதில் குழப்பம் ஏற்பட்டது. நம்பிக்கை வாக்கெடுப்பு தினத்தன்று காலையில் தான் அதிமுகவுக்கு எதிரான நிலைப்பாட்டுக்கு ஆதரவு என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
வாய் திறக்காத திருநாவுக்கரசர்
ஜெயலலிதா மரணத்தை தொடர்ந்து அதிமுக பிளவுபட்டபோது சசிகலா அணியை தி.மு.க. கடுமையாக எதிர்த்தது. ஆனால் திருநாவுக்கரசர் அந்த அணிக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்தது கூட்டணி உறவில் விரிசலை மேலும் அதிகமாக்கியது. மேலும் தாம் அதிமுக இருந்திருந்தால் முதல்வராகியிருப்பேன் என்று திருநாவுக்கரசர் வெளிப்படையாக கூறியது காங்கிரஸ், திமுக தலைவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இளங்கோவன் கிண்டல்
திருநாவுக்கரசரின் கருத்து குறித்து பேசிய ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், அவர் எப்போதும் அதிமுகவின் ஆதரவாளர். அவர் பிரதமர் பாஜகவில் இருந்திருந்தால் பிரதமராகியிருப்பார் போலும் என்று ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் நக்கலடித்தார்.
டெல்லி பயணம்
இந்த நிலையில் டெல்லிக்கு ஜனாதிபதியை சந்திக்க சென்ற தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், காங்கிரஸ் தலைவர் சோனியா, துணைத்தலைவர் ராகுல் ஆகியோரையும் சந்தித்தார். அப்போது தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் குறித்தும், கூட்டணி தர்மத்தை மீறுவது குறித்தும், அதிமுகவுக்கு ஆதரவான நிலைப்பாடு குறித்தும் புகார் தெரிவித்திருக்கலாம் என்று நம்பப்படுகிறது. மேலும் உள்ளாட்சி தேர்தலில் பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தி தனது அதிருப்தியை திமுக தெரிவித்திருக்கும் என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
தமிழக காங்கிரஸ் தலைவர் மாற்றமா
உள்ளாட்சி தேர்தலில் காங்கிரசுக்கு மிக சொற்ப இடத்தையே திமுக ஒதுக்கும் என கிசுகிசுக்கப்படுகிறது. கல்தா கொடுத்தாலும் கூட ஆச்சரியப்படுவதற்கில்லையாம். மே மாதத்திற்குள் உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் என்ற நிலை உள்ளதால், உள்ளாட்சித் தேர்தலுக்கு முன்பு தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவராக உள்ள திருநாவுக்கரசரை நீக்கி விட்டு வேறு ஒருவரை தலைவராக நியமிக்க கட்சித் தலைமை ஆலோசனை நடத்தி வருவதாகவும் தகவல்கள் கசிந்துள்ளன.