ஜெ. சொத்து தொடர்பான ஆவணங்கள் யாரிடம் இருக்கிறது?... ஒரு வேளை இதைத்தான் தேடுகிறார்களா??
ஜெயலலிதாவின் சொத்துகள் தொடர்பான ஆவணங்கள் யாரிடம் இருக்கிறது என்பதை கண்டறிவதற்காக வருமான வரித்துறை சோதனை சசிகலா குடும்பத்தை புரட்டிப் போட்டு வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
சென்னை : மறைந்த ஜெயலலிதாவின் சொத்துகள் தொடர்பான ஆவணங்கள் யாரிடம் இருக்கிறது என்பதை கண்டறிவதற்காகவே வருமான வரித்துறை சோதனை நடப்பதாக சில பரபரப்பான செய்திகள் உலா வருகின்றன.
நவம்பர் 9, 2017 "க்ளீன் பிளாக் மணி" என்ற பெயரில் தமிழகத்தில் சசிகலா குடும்பத்தினரை குறி வைத்து களத்தில் இறங்கியுள்ளனர் வருமான வரித்துறையினர். நேற்று அதிகாலை தொடங்கிய சோதனை ஜெயா டிவி மற்றும் நமது எம்ஜிஆர் அலுவலகத்தில் 2வது நாளாக நீடிக்கிறது. இதே போன்று சசிகலாவின் உறவினர்கள் வீடுகளிலும் இரண்டாவது நாளாக ஆவணங்களை சரிபார்க்கும் பணி நடைபெற்று வருகிறது.
சசி குடும்பத்திற்கு சொந்தமான பேன்சி ஸ்டீல்ஸ், ரெயின்போ ஏர், சுக்ரா கிளப், இந்தோ தோஹா கெமிக்கல்ஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் பல ஆண்டுகளாக செயல்படாமல் இருந்ததால் அவற்றின் உரிமங்களை மத்திய கம்பெனி விவகாரத்துறை ரத்து செய்துள்ளது. இந்த நிறுவனங்களின் இயக்குனர்களாக சசிகலா, இளவரசி மற்றும் குலோத்துங்கன் உள்ளிட்டோர் இயக்குனர்களாக இருந்துள்ளனர்.
சசிகலா தரப்பினர் சந்தேகம்
இந்த போலி நிறுவனங்கள மூலம் வெளிநாட்டு பணப்பரிவர்த்தனைகள் நடந்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரிலேயே வருமான வரி சோதனை நடப்பதாக கூறப்படுகிறது. ஆனால் இதில் அரசியல் உள்நோக்கம் இருப்பதாகக் கருதுகின்றனர் சசிகலா ஆதரவாளர்கள். ஏனெனில் இரண்டு நாட்களாக நடக்கும் இந்த சோதனையில் அவர்கள் தேடி வந்திருப்பது வேறு ஏதோ ஆவணங்களாக இருக்கலாம் என்று சந்தேகிக்கின்றனர்.
ஜெ. வின் ஆவணங்கள் எங்கே?
அதிலும் குறிப்பாக சசிகலாவின் குடும்பத்தில் அதிகாரிகள் தேடுவது ஜெயலலிதா சொத்து தொடர்பான ஆவணங்களை என்று சொல்லப்படுகிறது. ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் அவரின் சொத்துகளை சசிகலா குடும்பத்தினரே நிர்வகித்து வருகின்றனர். 2016 சட்டமன்ற தேர்தலின் போது ஆர்.கே நகரில் போட்டியிட ஜெயலலிதா தாக்கல் செய்த மனுவின்படி ஜெயலலிதாவின் மொத்த சொத்து மதிப்பு ரூ. 118 கோடியே 58 லட்சம்.
ஜெயலலிதாவின் சொத்துகள்
நிலம், கட்டடம் போன்ற அசையா சொத்தின் மதிப்பு ரூ. 72 கோடியே 9 லட்சத்து 83 ஆயிரத்து 190 ரூபாய். அசையா சொத்தில் போயஸ் கார்டன், மந்தவெளி, தேனாம்பேட்டை, ஐதராபாத் ஆகிய இடங்களில் உள்ள வணிக கட்டடங்களும் அடங்கும். இதைத்தவிர, காஞ்சிபுரம் மாவட்டத்திலும், ஹைதராபாத்திலும் 17.93 ஏக்கர் இருக்கிறது.
ஜெ.வின் பணம், நகைகள்
வங்கியில் டெபாசிட் செய்யப்பட்டுள்ள தொகை ரூ. 10 கோடியே 63 லட்ச ரூபாய். இதில் இரண்டு கோடி ரூபாய் சொத்து குவிப்பு வழக்கில் முடக்கப்பட்டுள்ளது. நிறுவனங்களில் முதலீடாக ரூ. 27 கோடியே 44 லட்ச ரூபாய் செய்யப்பட்டிருந்தது. சொத்துக்குவிப்பில் முடக்கப்பட்ட தங்கம் 21280.30 கிராம் மற்றும் வெள்ளி பொருட்கள் 1250 கிலோ. தனக்கு கடனாக 2 கோடியே 4 லட்சத்து 2 ஆயிரத்து 987 ரூபாய் உள்ளது என குறிப்பிட்டு இருந்தார்.
யார் யார் பெயரில் உள்ளது?
ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் வீடு, செயின்ட் மேரிஸ் ரோட்டில் உள்ள மனை, ஐதராபாத் திராட்சை தோட்டம் என்று 6 சொத்துகள் மட்டுமே ஜெயலலிதாவின் பெயரில் உள்ளது. எஞ்சியுள்ள நூற்றுக்கணக்கான சொத்துகள் சசிகலா மற்றும் அவரது குடும்பத்தைச் சேர்ந்தவர்களின் பெயர்களிலேயே இருப்பதாக சொல்லப்படுகிறது.
யாரிடம் உள்ளது ஆவணங்கள்?
எனவே ஜெயலலிதாவின் எந்ததெந்த சொத்துகள் யார் யார் பெயரில் இருக்கிறது என்பதற்கான ஆவணங்களைத் தேடும் படலமாக் கூட இது இருக்கலாம் என்பதே அதிமுக தொண்டர்களின் எண்ண ஓட்டமாக உள்ளது. வருமான வரி சோதனையின் முடிவில் சிக்கும் ஆவணங்கள் அதைத் தொடர்ந்த வழக்குகளுமே தொண்டர்களின் சந்தேகங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும்.