த்ரிஷாவின் முன்னாள் காதலர் வருண்மணியன் மீது தாக்குதலா?
தொழிலதிபர் வருண்மணியன் மற்றும் ஏசி மெகானிக்கிற்கு ஏற்பட்ட தகராறு குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை : நடிகை திரிஷாவின் முன்னாள் காதலரும் தொழிலதிபருமான வருண்மணியன், தொழிலாளர் ஒருவருடன் மோதலில் ஈடுபட்டது குறித்து சைதாப்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்
சென்னை அண்ணா சாலையில் உள்ள கிவிராஜ் கட்டிடத்தில் உள்ள 4வது தளத்தில் உள்ள தனது அலுவலகத்திற்கு தொழிலதிபர் வருண்மணியன் சென்றுள்ளார். அப்போது மாலை 4 மணியளவில் லிப்ட்டில் சென்ற போது தொழிலாளர்கள் இரண்டு பேருடன் வாக்குவாதம் ஏற்பட்டதாகத் தெரிகிறது. இதில் வருண்மணியன் தொழிலாளர்களை கடுமையான வார்த்தைகளால் திட்டி அடித்துள்ளார்.
இதற்கு எலக்ட்ரீஷியன்களான பாலமுருகன் மற்றும் முத்துக்குமார் வருண் மணியன் மீது பதில் தாக்குதல் நடத்தியுள்ளதாகத் தெரிகிறது. இதனையடுத்து வருண்மணியன் போலீசாரிடம் தொழிலாளர்கள் மீது புகார் அளித்ததையடுத்து அவர்களை சைதாப்பேட்டை போலீசார் கைது செய்துள்ளனர்.
ஆனால் வருண்மணியன் தனக்கு மரியாதை கொடுக்கத் தெரியாதா என்று எலக்ட்ரீஷியன்களைக் கேட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதில் வாக்குவாதம் முற்றியதையடுத்து வருண்மணியன் எலக்ட்ரீஷியன்களை தாக்க முயன்றபோது அவர்கள் கையில் வைத்திருந்த ஸ்க்ரூ டிரைவரால் தடுத்ததில் வருண்மணியனுக்கு கையில் காயம் ஏற்பட்டதாக அவர்கள் கூறியுள்ளனர்.
எனினும் வருண் மணியன் தொழிலாளர்கள் தாக்கியதாகவும், எலக்ட்ரீஷியன்கள் வருண்மணியனைதாக்கியதாகவும் இரண்டு தரப்பிலும் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இரண்டு பேரிடமும் சைதாப்பேட்டை போலீசார் விசாரணை நடத்தினர். இரு தரப்பிலும் தவறு இருப்பதால் சமாதான பேச்சு நடத்திய நிலையில் வழக்கு வாபஸ் பெறப்பட்டுள்ளது.
நடிகை த்ரிஷாவுடனான திருமணம் தடைபட்ட நிலையில் வேறு பெண்ணை அடுத்த மாதம் திருமணம் செய்து கொள்கிறார் வருண்மணியன். இந்த சமயத்தில் நடைபெற்றுள்ள இந்த சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.