"லேடி"யின் வழியில் அதிமுக எனில் மோடியின் அறிவுரையை கேட்பது சரியா ஓபிஎஸ் சார்?
ஜெயலலிதாவின் வழியில் நடப்போம் என்று கூறிவிட்டு பிரதமர் மோடியின் அறிவுரையை கேட்பது எந்த விதத்தில் சரியாக இருக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது.
Recommended Video
சென்னை: ஜெயலலிதா வழியில் நடப்போம் என்று அடிக்கடி கூறிக் கொள்ளும் துணை முதல்வர் ஓபிஎஸ், தற்போது பிரதமரின் அறிவுரையின் படிதான் அதிமுக இணைப்பு நடந்தது என்று கூறுவது எந்த விதத்தில் சரியாக இருக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது.
ஜெயலலிதாவின் பிறந்த நாள் விழா கொண்டாட்டம் குறித்து ஆலோசனை கூட்டம் தேனியில் நடைபெற்றது. இதில் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் கலந்து கொண்டார். மேலும் கம்பம் எம்எல்ஏ ஜக்கையன், தேனி எம்.பி பார்த்தீபன் உள்ளிட்டோர் இந்த விழாவில் கலந்து கொண்டனர்.
அப்போது துணை முதல்வர் ஓபிஎஸ் பேசுகையில், கட்சியின் நலன்கருதி அதிமுகவின் இரு அணிகளும் இணைய வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி என்னிடம் அறிவுறுத்தினார். அதற்கு நான் ஒப்புக் கொண்டேன்.
துணை முதல்வர் பதவி
அப்போது அவரிடம் அதிமுகவின் இரு அணிகளையும் இணைத்து கொள்கிறேன். ஆனால் அமைச்சரவையில் நான் இடம் பெற மாட்டேன். ஜெயலலிதா எனக்கு எல்லா பதவிகளையும் கொடுத்து அழகு பார்த்துவிட்டார் என்றேன். அதற்கு மோடியோ நீங்கள் கட்டாயம் அமைச்சரவையில் இருக்கத்தான் வேண்டும் என்றார், அதனால்தான் நான் துணை முதல்வராக உள்ளேன் என்று ஒரு பெரிய உண்மையை போட்டு ஓபிஎஸ் உடைத்துவிட்டார்.
இரு கைகளையும் கோர்த்த ஆளுநர்
அதிமுக இணைந்ததில் பெரும் பங்கு பாஜகவுக்கு உண்டு என்று எதிர்க்கட்சிகள் தெரிவித்தன. மேலும் தங்கள் ஆட்சியை காப்பாற்ற பாஜக கூறுவதை அதிமுக அரசு கேட்பதாகவும் வெளிப்படையாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. மேலும் துணை முதல்வராக ஓபிஎஸ் பதவியேற்ற விழாவில் அப்போதைய ஆளுநர் வித்யாசாகர் ராவ் ஓபிஎஸ் மற்றும் எடப்பாடியின் கைகளை பிடித்து சேர்த்து வைத்த காட்சிகள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தின.
ஆளுநரின் பணியா இது
இதை பார்த்த எதிர்க்கட்சிகள், அதிமுகவின் இரு அணிகளும் இணைந்ததில் பாஜகவுக்கு பங்கு இருக்கிறது என்றும் மோடி கட்டபஞ்சாயத்து செய்துவருவது முதல்வர், துணை முதல்வர் ஆகியோரின் கைகளை ஆளுநர் சேர்த்து வைத்ததில் இருந்தே தெரிகிறது என்று மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டினார். மேலும் ஆளுநரின் பணியா இது என்று அரசியல் கட்சிகள் கேள்வி எழுப்பின.
இது சரியா?
ஜெயலலிதா வழியில் ஆட்சியும் கட்சியும் நடக்கிறது என்று அடிக்கடி கூறிக் கொள்ளும் ஓபிஎஸ், ஜெயலலிதா விரும்பாத வகையில் கட்சியில் மோடியின் தலையீட்டின்படி அவரது அறிவுரையை பின்பற்றியது சரியா? என்ற கேள்வி எழுந்துள்ளது. டான்ஸி முறைகேடு, சொத்து குவிப்பு வழக்குகள் என எத்தனை வழக்குகள் ஜெயலலிதா மீது இருந்தாலும் அவற்றுக்காக யாருடனும் சென்று கூட்டணி வைத்ததோ, தேடி சென்று அறிவுரையை கேட்டதோ இல்லை.
லேடியா? மோடியா?
ஜெயலலிதா இருந்த போது அவர் எதிர்த்த திட்டங்களை இதுபோல் நாட்டாமை செய்ததன் மூலமாக மோடி அரசு சாதித்து கொண்டது. இதுதான் ஜெயலலிதா வழியா. கடந்த மக்களவை தேர்தலில் நண்பராக இருந்தாலும் தேர்தல் என்று வந்துவிட்டால் அவர் வேட்பாளர் என்று கருதி அந்த மோடியா? இல்லை இந்த லேடியா ? என்று ஜெயலலிதா கர்ஜித்தது இன்னும் நமது காதுகளில் ஒலித்துக் கொண்டிருக்கிறது. ஆனால் இவை கேட்க வேண்டியவர்களுக்கு கேட்காமல் போனது ஏனோ? என்று எண்ணத் தோன்றுகிறது.