காவிரி நீர் பங்கீட்டில் சட்டத்தை மதிக்காத கர்நாடகா... தனக்கு மிஞ்சியே தானம் என்பது சரியா?
காவிரி நீரை பங்கிட்டு கொள்ள உச்சநீதிமன்றம் விதித்த தீர்ப்புகளையும் தங்களுக்கே தண்ணீர் பஞ்சம் இருப்பதை காரணம் காட்டி கர்நாடகா தட்டிக் கழிப்பது நியாயமா?
Recommended Video
சென்னை : காவிரி நீரை பங்கிட்டு கொள்ள உச்சநீதிமன்றம் விதித்த தீர்ப்புகளையும் தங்களுக்கே தண்ணீர் பஞ்சம் இருப்பதை காரணம் காட்டி கர்நாடகா தட்டிக் கழிப்பது நியாயமா? அரசியல் காரணங்கள், மொழி பாகுபாடு இவற்றை கடந்து நாம் எல்லாம் இந்திய மக்கள் என்ற எண்ணம் வந்தால் ஒழிய காவிரி நீர் பங்கீட்டு விவகாரத்தில் தமிழக மக்களையும் கர்நாடகா மனிதர்களாக நினைத்து சட்டப்படியும் நியாயப்படியும் நடந்து கொள்ளும் என்றே தோன்றுகிறது.
நமக்கே தண்ணீர் இல்லை பிறகெப்படி தமிழகத்திற்கு தண்ணீர் கொடுப்பது காவிரி நீரை பகிர்ந்து கொள்வதற்கு கர்நாடகா கூறி வரும் காரணம். கடந்த ஆண்டுகளிலாவது பருவமழை இல்லாததால் தமிழகம், கர்நாடகா உள்ளிட்ட பகுதிகள் வறட்சியை சந்தித்தன. அப்போதும் கர்நாடகாவில் விவசாயத்திற்கு அந்த அளவில் பாதிப்பில்லை, ஆனால் தமிழகத்திலோ காவிரி நீர் வரும் அல்லது மழையாவது கை கொடுக்கும் என்று நம்பி பயிரிட்ட விவசாயிகள் அதுவும் கைகொடுக்காததால் வயலில் காய்ந்து கருகிய பயிர்களைக் கண்டு மனம் உடைந்து வயல்வெளியிலேயே தற்கொலை செய்து கொண்டனர்.
ஆனால் இந்த ஆண்டு பருவமழை கர்நாடகாவில் நல்ல அளவிலான மழையை பொழிந்துள்ளது. பெங்களூரு நகர சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடும் அளவிற்கு மழை கொட்டித் தீர்த்தது. அப்போது அணைகளில் நிரம்பிய உபரி நீர் தமிழகத்திற்கு வந்ததில் மேட்டூர் அணையின் நீர் இருப்பு அதிகரித்து அதற்கேற்ப ஜூலை மாதத்தில் தண்ணீர் திறந்து விடப்பட்டது.
சட்டத்தை கேள்விக்குள்ளாக்கும் கர்நாடகா
ஆனால் அதற்குப் பிறகு மழை குறைந்த நிலையில் மீண்டும் பழைய பல்லவியையே பாட ஆரம்பித்திருக்கிறது கர்நாடகா. தனக்கு மிஞ்சித் தான் தானமும் தர்மமும் என்று கர்நாடகா தொடர்ந்து முன்வைக்கும் சென்டிமென்ட் வசனம் சட்டத்தையும் கேள்விக்குள்ளாக்கி இருக்கிறது.
பொதுவான காவிரி நீர்
காவிரி நீர் என்பது அண்டை மாநிலங்களுக்கும் பொதுவானது என்ற விஷயங்களை ஆராய்ந்து தான் காவிரி நீரை கர்நாட்கா, தமிழ்நாடு, புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களோடு பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற உத்தரவே பிறப்பிக்கப்பட்டது. ஆனால் காவிரி நீரை வைத்து தங்கள் மாநில மக்கள், விவசாயிகள் மட்டுமே வளர்ச்சி பெற்றால் போதும் என்று நினைப்பது அரசியல் நோக்கமே தவிர வேறு எதுவும் இல்லை
விவசாயிகள் எதிர்க்கிறார்களா?
காவிரி நீரை தமிழகத்துடன் பங்கிட்டு கொள்வதற்கு முக்கியமாக எதிர்ப்பு தெரிவிப்பவர்கள் மாண்டியா, மைசூர், சாம்ராஜ்நகர் விவசாயிகளே. ஆனால் இந்த விவசாயிகள் உண்மை நிலையை உணர்ந்து தான் இப்படி எதிர்க்கிறார்களா அல்லது காவிரி நீர் விவகாரத்தை வைத்து அரசியல் செய்ய நினைக்கும் சில அமைப்புகளின் தூண்டுதல் காரணமாக இந்த எதிர்ப்பு வருகிறதா என்பதையும் பார்க்க வேண்டும்.
சட்டத்தை மீறும்
மத்திய அரசோ, மாநில அரசுகளோ யாராக இருந்தாலும் உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு கட்டுப்பட்டவர்களே. ஆனால் காவிரியில் இருந்து ஆண்டுக்கு 192 டிஎம்சி தண்ணீர் வரவேண்டிய நிலையில் 60 டிஎம்சியை மட்டும் கொடுத்துவிட்டு வறட்சி என்று காரணம் சொல்லும் கர்நாடகா விவகாரத்தில் மத்திய அரசு மவுனம் காப்பது ஏன்? காவிரி நீர் கேட்டு உச்சநீதிமன்றத்தில் வழக்குக்கு மேல் வழக்கு போட்டு தீர்ப்பு வந்தாலும் அதை மதிக்காத போக்கையே கடைபிடிக்கும் கர்நாடகா மீது இதுவரை என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது.
இரு மாநில விவசாயிகள் பேச்சுவார்த்தை
எந்த ஒரு விவசாயியும் மற்றவர் நிலத்தில் உள்ள பயிர் கருக வேண்டும் என்று நினைப்பதல்ல அது அவர் வணங்கும் பூமித்தாய்க்கு மட்டுமல்ல தான் உயிர் என நினைக்கும் விவசாயத்திற்கும் அந்த விவசாயி செய்யும் துரோகம். ஒருவேளை அரசியல் கட்சிகளை புறந்தள்ளிவிட்டு இரு மாநில விவசாயிகள் மட்டத்தில் காவிரி நீர் பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை நடத்தினால் இந்த விவகாரத்தில் தீர்வு எட்டப்படுமோ?