கனிமொழியை ஈயடிச்சான் காபியடிக்கும் கிருஷ்ணப்ரியா... "இலக்கணம் மாறுதோ"?
சசிகலாவின் அண்ணன் மகள் கிருஷ்ணப்ரியா கனிமொழிக்கு வாழ்த்து தெரிவித்ததோடு,அவர் போலவே கருப்பு, சிவப்பு சேலையில் இன்று விசாரணை கமிஷன் முன்பு ஆஜரானது எதை குறிக்கிறது என்ற கேள்வி எழுந்துள்ளது.
Recommended Video
சென்னை : 2ஜி வழக்கின் தீர்ப்பில் விடுதலையான கனிமொழிக்கு வாழ்த்து தெரிவித்த கிருஷ்ணப்ரியா இன்று விசாரணைக் கமிஷனில் ஆஜரான போது கனிமொழி போலவே கருப்பு, சிவப்பு நிறத்தில் சேலை அணிந்து வந்தது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
சசிகலா குடும்பத்தில் இருந்து அடுத்த அரசியல் பெருந்தலை யார் என்ற கேள்விக்கு ஆர்கே நகர் தேர்தலில் வெற்றி பெற்றதன் மூலம் முற்றுப்புள்ளி வைத்துள்ளார் டிடிவி. தினகரன். ஆனாலும் டிடிவி. தினகரனை ஒதுக்கிவிட்டு தாங்கள் முன்னிலை பெற வேண்டும் என்று சசிகலாவின் அண்ணன் வாரிசுகளான விவேக் மற்றும் கிருஷ்ணப்ரியா முயற்சித்து வருகின்றனர்.
ஜெயலலிதா பெயருக்கு களங்கம் ஏற்படுத்துவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று விவேக் ஒரு அறிக்கையை வெளியிட, ஜெயலலிதாவின் வீடியோவை வெளியிட்டது வேதனை தருவதாக கிருஷ்ணப்ரியா ஒரு பக்கம் பொங்கி எழுந்தார். ஜெயலலிதாவின் மரணத்திற்குப் பிறகு தாங்கள் தான் ஜெயலலிதாவிற்கு நெருக்கமாக இருந்தவர்கள் என்பதை வெளிக்காட்ட பல வகையிலும் விவேக்கும், கிருஷ்ணப்ரியாவும் முயற்சித்து வருகின்றனர்.
கிருஷ்ணப்ரியா வளைகாப்பு படங்கள்
கடந்த சில தினங்களுக்கு முன்னர் போயஸ் கார்டன் வீட்டில் வைத்து நடத்தப்பட்ட வளைகாப்பு நிகழ்ச்சியில் ஜெயலலிதா பங்கேற்ற புகைப்படங்களை வெளியிட்டிருந்தார் கிருஷ்ணப்ரியா. அதில் சென்டிமென்ட்டாக என்னுடைய 3 அம்மாக்கள் என்று சசிகலா, இளவரசி, ஜெயலலிதாவை குறிப்பிட்டு ஒரு பதிவை முகநூலில் வெளியிட்டிருந்தார் கிருஷ்ணப்ரியா.
ஏன் திடீரென கனிமொழிக்கு வாழ்த்து
ஆனால் அரசியலுக்கு வருவதற்காக இவர் போடும் திட்டங்கள் எல்லாம் ஓகே. ஏன் திடீரென திமுகவின் கனிமொழியுடன் நம்பு பாராட்டுகிறார் என்பது தான் தற்போதைய கேள்வி. அதிமுக அரசியல் என்பதே முற்றிலும் திமுகவை எதிர்ப்பது தான், ஆனால் ஆடு பகை குட்டி உறவு என்பது போல 2ஜி வழக்கில் இருந்து கனிமொழி விடுதலையான போது அவருக்கு கிருஷ்ணப்ரியா வாழ்த்துகளை தெரிவித்திருந்தார்.
கிருஷ்ணப்ரியாவின் கருப்பு, சிவப்பு சேலை
இந்நிலையில் இன்று ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்தி வரும் நீதிபதி ஆறுமுகசாமி கமிஷன் முன்பு ஆஜரான கிருஷ்ணப்ரியா, கருப்பு, சிவப்பு நிறத்தில் சேலை அணிந்து வந்திருந்தார். 2ஜி வழக்கில் கனமொழி விடுதலையான தினத்தன்று அவர் கருப்பு, சிவப்பு சேலையில் தான் வந்திருந்தார். திமுகவின் பெருமையை நிலைநாட்டச் செய்ய அவர் கழகக் கொடியின் சேலையிலேயே வந்திருந்தார் என்று கருதப்பட்டது.
சசிகலா காதில் சொல்லப்பட்டுள்ளதா?
ஆனால் இன்று கிருஷ்ணப்ரியா ஏன் கனிமொழி போலவே அதே நிறத்தில் சேலை அணிந்து வந்திருந்தார் என்ற கேள்வி எழுகிறது. சட்டசபையில் ஓ.பன்னீர்செல்வம் ஸ்டாலினைப் பார்த்து சிரித்த போதே தனக்கு எல்லாம் புரிந்துவிட்டதாக சொன்ன சசிகலாவிடம் கிருஷ்ணப்ரியாவின் செயல்களும் எடுத்துச் சொல்லப்படகிறதா?