தமிழக மக்களை சென்டிமென்ட்டா நம்ப வெச்சு ஏமாத்தியாச்சு... மத்திய அரசை எதிர்க்காதது மாதிரியும் ஆச்சு!
வாரியம் அமைக்காவிட்டால் தற்கொலை செய்வோம் என்று சென்டிமென்டாக பேசி மக்களை ஏமாற்றப்பார்க்கிறார்களோ என்ற சந்தேகம் தான் எழுகிறது.
Recommended Video
சென்னை : உச்சநீதிமன்ற தீர்ப்புப்படி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காவிட்டால் மத்திய அரசுக்கு எதிராக அதிமுக அரசு வெகுண்டெழுந்து
தமிழக மக்களின் உரிமைக்காக போராடும் என்று எதிர்ப்பார்த்தால், மேலாண்மை வாரியம் அமைக்காவிட்டால் ராஜினாமா செய்யமாட்டோம், தற்கொலை
செய்வோம் என்று பேசியுள்ளார் நவநீதகிருஷ்ணன் எம்.பி. ஒருவேளை தமிழக மக்களை உணர்வுபூர்வமாக மடக்கிப் போடுவதற்காக போடப்படும் திட்டமா
இது என்ற சந்தேகம் தான் இப்போதைய நிலையில் எழுகிறது.
காவிரி டெல்டா விவசாயிகளின் நீண்ட கால போராட்டம் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட வேண்டும் என்பது, காவிரி நடுவர் மன்றம்
2007லேயே காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று தீர்ப்பு வழங்கப்பட்டது. எனினும் 11 ஆண்டுகளாக இந்த தீர்ப்பு அச்சில் மட்டுமே
இருக்கிறதே தவிர செயலுக்கு வரவில்லை. இந்நிலையில் கடந்த பிப்ரவரி 16ம் தேதி காவிரி வழக்கில் இறுதித் தீர்ப்பு அளித்த உச்சநீதிமன்றம் காவிரி
மேலாண்மை வாரியத்தை 6 வாரத்திற்குள் அமைக்க உத்தரவிட்டது.
6 வார காலக்கெடு நாளையோடு முடிவடையும் நிலையில் மத்திய அரசும், அதிமுகவும் மாறி மாறி நடத்தும் அதிரடி திருப்பங்கள் இவர்கள் நடத்துவது
அனைத்துமே நாடகம் தானோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. உச்சநீதிமன்ற தீர்ப்பில் காவிரி மேலாண்மை வாரியம் என்று குறிப்பிடப்படவில்லை,
திட்டம் என்று தான் உள்ளது அதனால் 9 பேர் கொண்ட காவிரி மேற்பார்வை குழு தான் அமைக்கப்படும் என்று மத்திய நீர்வளத்துறை அமைச்சகம் தெளிவாக சொல்லியது.
தட்டிக்கழிக்க போடும் திட்டம்
ஆனால் இன்று திடீரென உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு குறித்து விளக்கம் கேட்டு மனு தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள்
வெளியாகியுள்ளன. காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதை மேலும் தாமதப்படுத்தவும், நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் இருந்து தப்பிக்கவுமே இந்த
நடவடிக்கையை மத்திய அரசு கையில் எடுத்ததாக தமிழக அரசியல் கட்சியினர் குற்றம்சாட்டுகின்றனர்.
பொறுமை காக்கும் அரசு
இந்நிலையில் காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்காவிட்டால் அதிமுக அரசு என்ன செய்யப்போகிறது என்று எதிர்பார்த்து
காத்திருக்கின்றனர் தமிழக மக்கள். ஏனெனில் மத்திய அரசு போலவே தமிழக அரசும் 29ம் தேதி வரை பொருத்திருந்து பார்க்கலாம் என்றே சொல்லிவருகிறது.
நவநீதகிருஷ்ணன் தற்கொலை மிரட்டல்
இதனிடையே காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி நாடாளுமன்றத்தில் 15 நாட்களுக்கும் மேலாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வந்தனர் அதிமுக
எம்பிகள். மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தை நீர்த்துப் போகச் செய்யவே அதிமுக பாஜகவுடன் கூட்டணி வைத்துக்கொண்டு செயல்படுவதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின. இந்நிலையில் இன்று ராஜ்யசபாவில் எம்பி நவநீதகிருஷ்ணன் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படாவிட்டால் ராஜினாமா செய்யமாட்டோம் தற்கொலை தான் செய்வோம் என்று தெரிவித்துள்ளார்.
தற்கொலை செய்வதால் என்ன பயன்?
மத்திய அரசை பணிய வைக்க எம்பிகள் கூண்டோடு ராஜினாமா அல்லது மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் என எத்தனையோ
வழிகள் இருக்கிறது. அப்படி இருக்கும்போது தற்கொலை செய்து கொள்வோம் என்று நவநீதகிருஷ்ணன் கூறுவதால் என்ன நடக்கப் போகிறது என்ற கேள்வியைத் தான் இது எழுப்பியுள்ளது.
இத தான் பிளானா?
ஒரு வேளை காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசுக்கு எதிராக அதிமுக என்ன செய்தது என்ற கேள்வியை மக்கள் முன்வைத்தால் நாங்கள் உயிரையும் விட தயாராக இருந்தோம், ஆனால் மத்திய அரசு கண்டுகொள்ளவேஇல்லை என்று தமிழக மக்களை உணர்வுப்பூர்வமாக ஏமாற்றும் வேலையா இந்த ஆவேச பேச்சு. அல்லது மத்திய அரசை எதிர்த்து எப்படி நம்பிக்கையில்லா தீர்மானம் கொடுப்பது அதில் இருந்து தப்பிப்பதற்காக இந்த அஸ்திரத்தை அதிமுக கையில் எடுக்கிறதா என்ற சந்தேகமும் அனைவர் மனதிலும் எழுகிறது.