பிச்சைக்காரர் உருவில் வந்தாரா சீரடி சாய்பாபா... பூஜை செய்து வழிபட்ட மக்களால் நாமக்கல்லில் பரபரப்பு!
நாமக்கல்: குமாரபாளையம் கோவிலுக்கு பிச்சைக்காரர் உருவில் சீரடி சாய்பாபா வந்ததாக பக்தர்கள் நம்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் எம்.ஜி.ஆர். நகர் பஸ் நிறுத்தம் கோணப்புள்ளா மேடு பகுதியில் சாய்பாபா கோவில் ஒன்று உள்ளது.
இந்த கோவிலுக்கு நேற்று அழுக்கு உடைகள் அணிந்து தாடி மீசையுடன் பிச்சைக்காரர் ஒருவர் வழிபாடு செய்ய வந்துள்ளார். கோவிலின் ஒரு பகுதியில் அமர்ந்து தியானம் செய்த அந்நபர், பின்னர் அங்கிருந்த பக்தர்களை பார்த்து கைகளை நீட்டி ஆசி வழங்கியுள்ளார்.
இதனால், பாபா தான் பிச்சைக்காரர் உருவத்தில் வந்திருப்பதாக அங்கிருந்த பக்தர்கள் கருதினர். எனவே, அந்தப் பிச்சைக்காரருக்கு அங்கிருந்த பக்தர்கள் மாலை அணிவித்து, தலையில் பூக்களைப்போட்டு மரியாதை செலுத்தினர். பின்னர் ஒவ்வொருவராக அவரது காலில் விழுந்து ஆசிர்வாதம் பெற்றனர்.
ஒருசில பக்தர்கள் அவர் அருகில் அமர்ந்து அன்பாக பேசி சாப்பாடு ஊட்டினார்கள். சிலர் வீட்டில் இருந்து உணவு வககைள், பழங்கள் போன்றவற்றை எடுத்து வந்து அவருக்கு கொடுத்தனர்.
இந்த செய்தி அப்பகுதியில் காட்டுத்தீ போல பரவியது. இதையடுத்து ஏராளமான பக்தர்கள் அங்கு திரண்டனர். நீண்ட வரிசையில் நின்று அந்த நபரிடம் ஆசிர்வாதமும் பெற்றுச் சென்றனர்.
இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.