பாலியல் புகாரை திசை திருப்பவே மாணவி மீது திருட்டு புகாரா?... உண்மையில் நடந்தது என்ன?
திருவண்ணாமலை: பாலியல் புகாரை திசை திருப்பவே மாணவி மீது திருட்டு புகார் கூறப்படுகிறதா என்ற சந்தேகத்தை சிலர் எழுப்புகின்றனர்.
திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டில் உள்ள அரசு வேளாண் கல்லூரியில் சென்னை மாணவி பிஎஸ்சி படித்து வருகிறார். அவருக்கு பேராசிரியர்கள் தங்கபாண்டியன், மைதிலி, புனிதா உள்ளிட்டோர் செக்ஸ் டார்ச்சர் கொடுத்ததாக மாணவி புகார் அளித்தார். இதுதொடர்பான ஆடியோ பேச்சுக்களும் வெளியாகின. மேலும் மாவட்ட நீதிபதி மகிழேந்தி நேரில் சென்று விசாரணை நடத்தினார்.
சந்தேகம்
இந்த நிலையில் திடீரென பாதிக்கப்பட்ட மாணவி மீது சக மாணவர்கள் திருட்டு புகாரை கூறி நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். பேனா, ஐடி கார்டு, பென்சில் ஆகியவற்றை அந்த மாணவி திருடுவார் என்று குறிப்பிட்டுள்ளனர். லாஜிக்கே இல்லாத வகையில் மாணவி மீது எழுந்துள்ள இந்த புகாரால் பாலியல் புகார் விவகாரத்தை திசை திருப்ப முயற்சி நடக்கிறதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
சந்தேகம்
மாணவியிடம் பேசிய பேராசிரியைகள் இருவரும் பேசிய பேச்சுக்கள் அங்கே என்ன நடக்கிறது என்பதை அம்பலப்படுத்துவதாக உள்ளது. டிஜிபி வரை அவர்கள் தங்களது பேச்சில் இழுத்துள்ளனர். அப்படியானால் மிகப் பெரிய அளவிலான பாலியல் முறைகேடுகள் அங்கு நடந்திருப்பதும் உறுதியாகிறது. ஆனால் அதிலிருந்து அனைவரையும் திசை திருப்பவே பேனா திருடினார், பென்சில் திருடினார் என்று சொல்கிறார்களா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
ஈரக்குலையே நடுங்குகிறது
பேனா, பென்சில் திருடும் குற்றமும், பெண்ணின் கற்பை சூறையாடும் குற்றமும் ஒன்றா என்ன. எதற்காக இந்த பழி. எனவே மாவட்ட நீதிபதி நன்கு விசாரணை நடத்தி உண்மையை கண்டுபிடிக்க வேண்டும். அந்த ஆடியோவில் எத்தனை எத்தனை மிரட்டல்கள். ஏதோ தாதாக்கள் போல் பேராசிரியைகள் மிரட்டுவதை பார்க்கும் போது ஈரக்குலையே நடுங்குகிறது என்று பெற்றோர்கள் பதறுகிறார்கள்.
டிஜிபியின் பெயரை
நிர்மலா தேவி விவகாரத்தில் அவர் வீடியோவில் ஆளுநர் தாத்தா... ஆளுநர் தாத்தா என்று பேசினார். இதையடுத்து ஆளுநர் பத்திரிகையாளர்களை சந்தித்து தன்னிலை விளக்கம் அளித்தார். அதுபோல் இந்த ஆடியோவில் பேராசிரியைகள் டிஜிபியின் பெயரை பயன்படுத்துகின்றனர். எனவே அவரும் இது குறித்து விளக்கம் அளித்தால் மக்களுக்கு நம்பிக்கை வரும்.
குரல் மாதிரி
நிர்மலாதேவியின் குரல் மாதிரியை ஆடியோவுடன் ஒப்பிட்டது போல் பேராசிரியைகள் பேசியதாக கூறப்படும் ஆடியோவின் நம்பகத்தன்மையை சோதனை செய்ய வேண்டும். விசாரணையில் பேராசிரியர்கள் தவறு செய்திருந்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மாணவி பொய்யான புகார் அளித்திருந்தால் அவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.