சென்னையில் போராட்டம் நடத்தும் செவிலியர்கள் கூண்டோடு டிஸ்மிஸ்?
சென்னை: பல்வேறு கோரிக்கைக்களுக்காக மூன்றாவது நாளாகப் போராடி வரும் செவிலியர்கள் பணிநீக்கம் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
கடந்த 2015ம் ஆண்டு மருத்துவர் தேர்வு வாரியத்தின் மூலம் செவிலியர் பணிக்கு 10,000க்கும் அதிகமான செவிலியர்கள் பணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். இவர்களுக்கு தொகுப்பு ஊதியத்தின் அடிப்படையில் மாதம் ஏழாயிரம் ரூபாய் நிர்ணயிக்கப்பட்டது.
அரசின் ஆணைப்படி, இரண்டு ஆண்டுகளில் இவர்களுக்கு பணி நிரந்தரம் செய்யப்பட்டு, கால நிலை அடிப்படையில் அரசு செவிலியர்களுக்கு நிகரான ஊதியம் வழங்கப்பட்டு இருக்க வேண்டும். ஆனால், இதுவரை பணி நிரந்தரமோ, ஊதிய உயர்வோ தரப்படாததால் நவம்பர் மாதம் முதலே கருப்பு பேட்ஜ் அணிந்து வேலை செய்யும் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில், கடந்த திங்கட்கிழமை முதல் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள டி.எம்.எஸ் வளாகத்தில் உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வருகிறார்கள். இதில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட செவிலியர்கள் கலந்துகொண்டுள்ளார்கள்.
தலைமைச் செயலகத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரோடு நடந்த பேச்சுவார்த்தையில், எட்டப்பட்ட முடிவை அடுத்து ஒரு பகுதியினர் போராட்டத்தைக் கைவிட்டு பணிக்குத் திரும்பினர். ஆனால், இன்னும் பலர் போராட்டத்தை மூன்றாவது நாளாக நடத்தி வருகிறார்கள்.
இவர்களிடம் விளக்கம் கேட்டு பொதுசுகாதாரத்துறை நோட்டீஸ் அனுப்பி உள்ளது. இந்நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டு வரும் செவிலியர்கள் அனைவரும் பணி நீக்கம் செய்யப்படுவதாகவும், பணி நீக்கம் குறித்து செவிலியர்களுக்கு எஸ்.எம்.எஸ் அனுப்பப்பட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.