பிரகாஷ் ராஜ் மாதிரியே இருக்காகளே... நம்ம அமைச்சர் 'ஐயா'!
மதுரை: மதுரையை உலுக்கிய மாநகராட்சி பிறப்பு இறப்பு சான்றிதழ் விவகாரத்தில் புதுத் தகவல் ஒன்று படையெடுத்துக் கிளம்பியுள்ளது. அதாவது சம்பந்தப்பட்ட அமைச்சரே இந்த விவகாரத்தின் பின்னணியில் இருப்பதாக கிசுகிசுக்க ஆரம்பித்துள்ளனர்.
அதாவது ஜோசியக்காரர் ஒருவர் கூறிய அறிவுரையின்படிதான் இந்த விவகாரமே நடந்ததாக அந்த கிசுகிசுப்பு கூறுகிறது.
ஆனால் சம்பந்தப்பட்ட அமைச்சரான செல்லூர் ராஜுவோ, இது திமுகவினரின் சதிதான். இதை முதல்வர் தலைமையிலான காவல்துறை திறம்பட விசாரித்து உண்மைக் குற்றவாளிகளைக் கைது செய்யும் என்று திட்டவட்டமாக கூறுகிறார்.
அமைச்சர் இறந்து விட்டதாக சான்றிதழ்
அமைச்சர் செல்லூர் ராஜு மற்றும் கம்யூனிஸ்ட் எம்.எல்.ஏ அண்ணாதுரை ஆகியோர் இறந்து விட்டதாக அவர்களது பெயரில் இறப்புச் சான்றிதழ் விநியோகமான விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
மதுரை மாநகராட்சியின் அவலம்
இந்த சான்றிதழை வெளியிட்டது மதுரை மாநகராட்சி. இதனால் மதுரை மாநகராட்சியின் அவலட்சணத்தைப் பார்த்து தமிழகமே சிரித்தது.
லஞ்சத்தின் விஸ்வரூபம்
மதுரை மாநகராட்சியில் தலை விரித்தாடும் லஞ்ச லாவண்யத்தின் உச்சகட்டம்தான் இது என்று பலரும் விமர்சிக்கும் நிலை ஏற்பட்டது.
ஆனால்.. மேட்டரே வேறயாம்
ஆனால் இப்போது புதுத் தகவல் ஒன்று கிளம்பியுள்ளது. அதாவது அமைச்சர் செல்லூர் ராஜுதான் இந்த விவகாரத்தை திட்டமிட்டுக் கிளப்பியதாக அந்த புதுத் தகவல் கூறுகிறது.
ஐயா படத்தில் வருவது போல...!
ஐயா படத்தில் பிரகாஷ் ராஜ் செத்துப் போனது போல ஒரு காட்சி வரும். உடனே ஊரே திரண்டு வந்து அவருக்கு அஞ்சலி செலுத்தி ஒப்பாரி வைக்கும். அப்போது திடீரென எழுந்து உட்காருவார் பிரகாஷ் ராஜ்..அதேபோலத்தான் இந்த விவகாரமும் இருப்பதாக கூறுகிறார்கள்.
''இறந்தது போல வதந்தி பரப்புங்கள்.. ஊரே பேச வேண்டும்''
அதாவது கேரளாவைச் சேர்ந்த ஒரு ஜோதிடர், சம்பந்தப்பட்ட அமைச்சரிடம், நீங்கள் இறந்து விட்டதாக வதந்தியைக் கிளப்புங்கள். ஊரெல்லாம் நீங்கள் இறந்துவிட்டதாகப் பேச வேண்டும். அப்போதுதான் உங்களது பதவியும் நீடிக்கும், ஆயுளும் கூடும் என்று யோசனை கூறினாராம்.
அமைச்சர் தரப்பே வாங்கியதா சான்றிதழை...?
இதையடுத்து அமைச்சர் தரப்பிலிருந்தே இப்படி ஒரு சான்றிதழை வாங்கி ஊரெங்கும் பரப்பி விட்டதாக சொல்கிறார்கள். அமைச்சர் பெயருக்கு மட்டும் வாங்கினால் எங்கே குட்டு வெளிப்பட்டு விடுமோ என்ற சந்தேகத்தில்தான், அண்ணாதுரை பெயரையும் சேர்த்து கோர்த்து விட்டனராம்.
அதெல்லாம் இல்லை...
ஆனால் அமைச்சர் ராஜு இதை மறுக்கிறார். அவர் கூறுகையில், இது திமுகவினரின் சதி. கடந்த 15 ஆண்டுகளாக மதுரை மாநகராட்சி தி.மு.க-வினரின் கட்டுப்பாட்டில்தான் இருந்தது. அம்மா ஆட்சியின் காவல் துறை குற்றவாளிகளை விரைவில் கண்டுபிடிக்கும். இதுபற்றி எனக்குக் கொஞ்சம்கூட வருத்தமில்லை என்கிறார்.
'அம்மா' கண்டுபிடிப்பாரா...?
தற்போது விவகாரம் முதல்வர் காதுகளுக்குப் போயிருக்கிறதாம். அவர் உண்மையைக் கண்டுபிடிப்பார் என்ற நம்பிக்கையில் சிலர் உள்ளனராம்.