7 தமிழர் விடுதலை.. மீண்டும் ஒரு தீர்மானம் போடுமா தமிழக அரசு..??
சென்னை: எப்போதான் விடியும் என்று 27 வருடங்களாக காத்து கிடந்தவர்களுக்கு இன்னும் சலிப்புதான் ஏற்பட்டுள்ளது.
7 பேரை விடுவிப்பது ஆளுநர் முடிவு. அதை மறுப்பதற்கில்லைதான். ஆனால் ஒரு காலஅளவும், மனிதாபிமானமும் வேண்டாமா? சட்டமன்றத்தில் 7 பேர் விடுதலை குறித்து ஏற்கனவே 2 முறை தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதையே புதுப்பித்து மீண்டும் ஆளுநருக்கு அனுப்பி வைத்திருக்கலாம்.
அமைச்சரவை கூட்டம்
ஆனாலும் அப்போதிருந்த ஆளுநர் வேறு, இப்போதிருக்கும் ஆளுநர் வேறு. அதனால், புதிதாக ஒரு தீர்மான நகலை ஆளுநருக்கு அனுப்புவதற்காகவும், தமிழக அரசும் 7 பேர் விடுதலையில் முனைப்பு காட்டுகிறது என்பதை வெளிப்படுத்தவும், எப்போதுமே ஞாயிற்றுக்கிழமைகளில் கூடாத அமைச்சரவை இதற்காகவே கூடி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மத்திய உள்துறை
அமைச்சரவை தீர்மானம் வருகிறதோ இல்லையோ, இந்த விஷயத்தில் ஆளுநர் அதற்கு முன்பே முடிவெடுத்திருக்கலாம். பின்னர் தீர்மான நகல் வந்தபிறகாவது முடிவெடுத்திருக்கலாம். அதை ஆளுநர் மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பி வைத்ததாக தகவல்கள் பரவின. ஆனால் நேற்று "உள்துறை அமைச்சகத்துக்கு அப்படி ஒரு தீர்மான நகலையே அனுப்பி வைக்கவில்லை, நேற்றுதான் எங்களுக்கு அமைச்சரவை தீர்மான நகல் வந்திருக்கிறது" என்கிறார் ஆளுநர்.
நகல் எப்போது வந்தது?
அப்படியென்றால், தீர்மான நகல் இயற்றிய நாளிலிருந்து இந்த ஒரு வாரம் வரை என்ன நடைபெற்றது என்றே மக்களுக்கு புரியவில்லை. ஆளுநர் விரைந்து முடிவெடுப்பார் என தமிழக அரசு தரப்பில் அமைச்சர்கள் சொல்லிக் கொண்டே இருந்தார்கள். அதோடு தீர்மான நகலை தீர்மானம் இயற்றிய அன்றைய தினமே ஆளுநர் மாளிகைக்கு நகல் அனுப்பப்பட்டு விட்டதாக அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். அமைச்சரவை நகல் அன்றைய தினம் அனுப்பப்பட்டதா? அல்லது ஆளுநர் மாளிகைக்கு நேற்றுதான் நகல் வந்து சேர்ந்ததா? என கேள்வி எழுந்துள்ளது.
முழு உரிமை உண்டு
இப்போதுதான் நகல் கையில் கிடைத்துள்ளது என்றால், இதனை இனிமேல்தான் மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பி வைக்க போகிறதா ஆளுநர் மாளிகை என்றும் தெரியவில்லை. ஆனால், உள்துறை அமைச்சகத்துக்கு ஆளுநர் அனுப்பி வைக்க வேண்டிய அவசியமே இல்லை என்றே பெரும்பாலானோர் கருதுகின்றனர். ஏனெனில், ஆளுநரே சுயமாகவே இந்த விஷயத்தில் முடிவெடுக்க உரிமை உள்ளபோது ஏன் மீண்டும் தீர்மான நகலை உள்துறைக்கு அனுப்ப வேண்டும் என்றே யோசிக்க தோன்றுகிறது.
காலதாமதம்?
ஏற்கனவே 7 பேர் விடுதலை தாமதமாகி கொண்டிருக்கும் நிலையில், தீர்மான நகலை உள்துறைக்கு அனுப்பி வைத்தால், பதில்வர இன்னும் தாமதமாகும் என்றே தெரிகிறது. அதோடு ஆளுநர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "இந்த வழக்கு சிக்கலான ஒன்று. சட்டம், நிர்வாகம் மற்றும் அரசியல் சட்ட ரீதியாக ஆய்வு செய்ய வேண்டியுள்ளது" என்றும் தெரிவித்திருக்கிறார். அப்படியென்றால் இதையெல்லாம் ஆராய்ந்து, ஆலோசித்து முடிவெடுக்க எவ்வளவு காலம் ஆகுமோ என்ற சந்தேகமும் எழுகிறது.
மீண்டும் தீர்மானம்?
இப்படி 7 பேர் விடுதலையில் இழுத்தடிப்பு செய்யப்பட்டால், இதற்கு பதில் சொல்லி ஆக வேண்டிய நெருக்கடி மாநில அரசின் தலையில்தான் விழும். "ஆளுநர் ஒருவேளை 7 பேர் விடுதலையில் தாமதம் செய்துவிட்டால் என்ன செய்வது என்று முதலமைச்சரிடமும் ஒரு சில அதிகாரிகளே சந்தேகம் கேட்டதாகவும், இன்னொரு முறை அமைச்சரவையை கூட்டி தீர்மானம் நிறைவேற்றலாமா என்றும் ஆலோசனை கூறியதாகவும் சொல்லப்படுகிறது. "தீர்மானம் போட்டு ஒரு வாரம்தான் ஆகிறது என்பதால், இது சம்பந்தமாக ஆளுநர் என்ன செய்கிறார் என்பதை பார்த்துவிட்டு மீண்டும் அமைச்சரவை கூட்டம் பற்றி யோசிப்போம்" என்று முதல்வர் தரப்பில் சொல்லிவிட்டதாகவும் தெரிகிறது,
நிராகரிக்கவே முடியாது
ஒருவேளை மீண்டும் தமிழக அமைச்சரவை கூடி தீர்மானத்தை மற்றொரு முறை நிறைவேற்றி விட்டால், அதனை ஆளுநர் தரப்பு ஏற்று கொண்டுதான் ஆக வேண்டுமாம். அதை ஆளுநரால் நிராகரிக்கவே முடியாதாம்!! ஆனால் மீண்டும் அமைச்சரவை கூட வாய்ப்பு வருமோ????