இப்படிப் பேசினால் விஜயகாந்த்துக்கு மக்கள் ஓட்டுப் போட்டு விடுவார்களா?
சென்னை: முதல்வர் வேட்பாளர் என்று மக்கள் நலக் கூட்டணி- தேமுதிகவால் அறிவிக்கப்பட்ட விஜயகாந்த், கூட்டங்களில் பேசி வருவதைப் பார்த்தால், அவருக்கு ஓட்டுப் போட இந்தப் பேச்சுக்கள் போதுமானதா என்ற கேள்வி மக்களிடையே எழுந்துள்ளது.
விஜயகாந்த்துக்கு தீவிரமாக ஆதரவு தெரிவித்து பேசி வருவோர் கூட, இன்னும் அவரது பேச்சில் தெளிவு வரவில்லையே, இப்படியே பேசிக் கொண்டிருந்தால் எப்படி என்ற கருத்துக்கு வர ஆரம்பித்துள்ளனர்.
முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டவர் தொடர்ந்து இப்படி அரைகுறையாக பேசுவது அந்தக் கட்சியினரையும் கூட்டணிக் கட்சியின் தொண்டர்களையும் பரிதவிப்பில் ஆழ்த்தியுள்ளது.
பேச்சில் தெளிவில்லை
சமீப காலமாக விஜயகாந்த் பேச்சில் தெளிவில்லை. கோர்வையாகப் பேசுவதில்லை. சொல்ல வருவதை முழுமையாக சொல்லி முடிப்பதற்குள் அடுத்த வார்த்தைக்குப் போய் விடுகிறார்.
எதிர்பார்ப்பு அதிகம்
அவர் மீது பலருக்கு இன்னும் எதிர்பார்ப்பு அதிகமாகவே உள்ளது. ஆனால் அவர்களது எதிர்பார்ப்புக்கு ஏற்றார் போல அவரது பேச்சு இல்லை. அவரது செயல்பாடும் இல்லை.
அமைதியாக இருக்கிறார்
கூட்டத்திற்கு லேட்டாகத்தான் வருகிறார். வருகிறவர் அமைதியாக அவர் பாட்டுக்கு இருக்கிறார். அவ்வப்போது பக்கத்தில் இருப்பவர்களிடம் பேசுகிறார். கடைசியாக அவரை பேச விடுகிறார்கள்.
பேசும் நேரம் குறைவு
அவரது பேசும் நேரமும் குறைந்து விட்டது. 10 நிமிடம், 15 நிமிடம்தான் பேசுகிறார். அவர் பேசுவதில் முக்கால்வாசி புரிவதில்லை அல்லது தேவையில்லாத பேச்சுக்களாக இருக்கிறது.
இவரா முதல்வர் வேட்பாளர்?
முத்தரசனோ, வைகோவோ, திருமாவளவனோ, ஜி.ராமகிருஷ்ணனோ இப்படிப் பேசினால் யாரும் கண்டு கொள்ளப் போவதில்லை. ஆனால் விஜயகாந்த் ஒரு முதல்வர் வேட்பாளர். அப்படி இருக்கும்போது அவர் பேச வேண்டியது அவசியம்.
முதல்வர் பதவி சாதாரணமா?
முதல்வர் பதவி என்பது பிரேமலதா விஜயகாந்த், மக்கள் நலக் கூட்டணி நினைப்பது போல அவ்வளவு சாதாரணமானதா என்ற கேள்வியும் எழுகிறது. அல்லது அந்தப் பதவியை ஜஸ்ட் லைக் தட் சமாளித்து விடலாம் என்ற எண்ணத்தில் அவர்கள் இருக்கிறார்களா என்ற கேள்வியும் எழுகிறது.
தெளிவு தேவையில்லையா?
முதல்வர் பதவி என்பது முழுமையான விழிப்புணர்வுடன் இருக்க வேண்டிய முக்கியமான பொறுப்பு. அது கடமை அல்ல, மிகப் பெரிய பொறுப்பு. ஆனால் முதல்வர் வேட்பாளர் என்று மட்டும் அறிவித்து விட்டு, அதற்கான தகுதிகளுடன் விஜயகாந்த் பேசக் கூட முடியாமல் இருப்பது போலவே தெரிகிறது.
இதை வைத்து ஓட்டுப் போடுவார்களா?
விஜயகாந்த் முகத்தைக் காட்டினால் போதும், அவர் கொஞ்ச நேரம் பேசினால் போதும் என்ற முடிவுக்கு வைகோவும் இதர தலைவர்களும் வந்திருந்தால் அது சரியா என்ற கேள்வியும் வருகிறது. விஜயகாந்த்த்தின் பேச்சை மட்டும் ஓட்டு விழும் என்று கருதினால் நிச்சயம் அப்படி எதிர்பார்ப்பவர்களுக்கு நிச்சயம் ஏமாற்றம்தான் கிடைக்கும்.
பேசத்தான் விடுங்களேன்
விஜயகாந்த் முதல்வர் வேட்பாளர்.. அப்படி இருக்கும் போது அவரிடம் மக்கள் நிறைய எதிர்பார்ப்பார்கள். அவர் பேசுவதைக் கவனிக்கக் காத்திருப்பார்கள். அவர் என்ன திட்டம் வைத்திருக்கிறார் என்பதை அறிய முற்படுவார்கள். ஆனால் விஜயகாந்த் அந்த மாதிரி இல்லை. அது நிச்சயம் பின்னடைவைத்தான் தரும் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.