மூளைச்சாவு அடைந்த இளைஞரின் கல்லீரல் நடராஜனுக்கு பொருத்தப்பட்டதா? மருத்துவனை அறிக்கை
மூளைச்சாவு அடைந்த தஞ்சாவூரைச் சேர்ந்த கார்த்திக் என்ற இளைஞரின் கல்லீரல் சசிகலா கணவர் நடராஜனுக்கு பொருத்தப்பட்டதாக தெரிகிறது.
சென்னை : குளோபல் மருத்துவமனையில் மூளைச்சாவு அடைந்த தஞ்சாவூரைச் சேர்ந்த இளைஞர் கார்த்திக் என்பவரின் கல்லீரல், சிறுநீரகம் 74 வயது நபருக்கு பொருத்தப்பட்டுள்ளதாக மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.
சென்னை பெரும்பாக்கத்தில் செயல்பட்டு வரும் குளோபல் ஹெல்த் சிட்டி மருத்துவமனை இன்று ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் தஞ்சாவூரைச் சேர்ந்த கார்த்திக் என்ற இளைஞர் கடந்த செப்டம்பர் 30ம் தேதி தலையில் பலத்த காயம் மற்றும் கடுமையான எலும்பு முறிவு ஏற்பட்டு உள்ளூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கார்த்திக்கின் குடும்பம் ஏழ்மை நிலையில் இருந்ததை மருத்துவர்கள் உணர்ந்துள்ளனர்.
இதனையடுத்து அவருக்கு மேல்சிகிச்சை செய்வதற்காக கார்த்திக்கை குளோபல் மருத்துவமனைக்கு மருத்துவர்கள் அனுப்பிவைத்தனர். கார்த்திக்கிற்கு அவருக்கு நரம்பியல் மற்றும் அவசர சிகிச்சை பிரிவைச் சேர்ந்த மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர்.
தஞ்சாவூர் இளைஞருக்கு மூளைச்சாவு
ஆனால் தலையில் ஏற்பட்ட பலத்த காயம் காரணமாக கார்த்திக் அக்டோபர் 3ம் தேதி மூளைச்சாவு அடைந்துவிட்டார். அவருடைய மற்ற உறுப்புகள் செயல்பாட்டில் இருந்தாலும் மூளை செயல்பாட்டை இழந்துவிட்டது.
பெற்றோரிடம் மருத்துவர்கள் கோரிக்கை
இதனையடுத்து மருத்துவமனை கார்த்திக்கின் குடும்பத்தினரிடம் உறுப்பு தானம் குறித்து எடுத்துக் கூறியுள்ளது. கார்த்திக் உயிர்பிழைக்காத நிலையில் அவரது உறுப்புகள் மூலம் பிறருக்கு வாழ்வு கிடைக்கும் என்ற மருத்துவமனை கூறியதையடுத்து தமிழ்நாடு உறுப்பு மாற்று விதிகள் படி கார்த்திக்கின் கல்லீரல், இதயம், ஒரு சிறுநீரகம், நுரையீரல் உள்ளிட்டவை இதே மருத்துவமனையில் சிகிச்சை பெற்றவர்களுக்கு பொருத்தப்பட்டுள்ளது.
கல்லீரல், சிறுநீரகம் ஒருவருக்கு தானம்
மற்றொரு சிறுநீரகம் மற்றும் அரசு விதிகளின் படி பொது தளத்தில் தானமாக அளிக்கப்பட்டுள்ளது. இதன்படி மூளைச்சாவு அடைந்த கார்த்திக்கின் இருதயம் தமிழகத்தை சேர்ந்த 43 வயது நபருக்கும், நுரையீரல் உத்திரபிரதேசத்தை சேர்ந்த 62 நபருக்கும் பொருத்தப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. மேலும் கல்லீரல் மற்றும் சிறுநீரகம் காத்திருப்பு பட்டியலில் இருந்த 74 வயது நபருக்கு பொருத்தப்பட்டுள்ளது. அனைத்து உறுப்பு மாற்று சிகிச்சையும் நல்ல முறையில் நடைபெற்று நோயாளிகள் நல்ல உடல்நிலையில் இருக்கின்றனர் என்று மருத்துவமனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நடராஜனுக்கு தானமாக தரப்பட்டதா?
குளோபல் மருத்துவமனையில் தான் சசிகலாவின் கணவர் நடராஜனும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். 74 வயது நபருக்கு கல்லீரல் மற்றும் சிறுநீரகம் மாற்றப்பட்டுள்ளது என்று மருத்துவமனை கூறியுள்ளதால், இவருக்குத் தான் மூளைச்சாவு அடைந்த இளைஞரின் உறுப்பு மாற்றப்பட்டிருக்கும் என்று தெரிகிறது. நடராஜனுக்கு மட்டும் எப்படி சீக்கிரமாக மாற்று கல்லீரல் கிடைத்தது என்ற சர்ச்சைகளுக்கு பதிலளிக்க இதுபோன்று பெயர் குறிப்பிடாத அறிக்கை வெளியிடப்பட்டிருக்கும் என்று கூறப்படுகிறது.