ஸ்டெர்லைட்டுக்கு எதிராக மாணவர்கள் போராட்டம்... தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகம் முற்றுகை!
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி மாணவர்கள் ஆட்சியர் அலுவலகத் தடுப்பு வேலிகளை உடைத்து சென்று முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
Recommended Video
தூத்துக்குடி: ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி மாணவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டுள்ளனர். தடுப்புவேலிகளை உடைத்துச் சென்று மாணவ அமைப்பினர் முற்றுகை போராட்டம் செய்து வருவதால் பரபரப்பு நிலவுகிறது.
தூத்துக்குடியில் செயல்பட்டு வரும் தாமிர உருக்கு ஸ்டெர்லைட் ஆலையால் சுற்றுச்சூழல் பாதிப்பு, வாழ்வாதாரம் பறிபோவதால் அதனை நிரந்தரமாக மூட வலியுறுத்தி தீவிரமாக மக்களின் போராட்டம் நடைபெற்று வருகிறது. பராமரிப்புக்காக மூடப்பட்ட ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் செயல்பட உரிமம் கேட்டு தாக்கல் செய்த மனுவை தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் நிராகரித்தது.
இதனால் மக்களின் போராட்டம் ஓய்ந்துவிடும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடும் வரை போராட்டம் தொடரும் என்று அறிவித்துள்ளனர். இந்நிலையில் இந்திய மாணவர் சங்கத்தினர் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தை அறிவித்திருந்தனர்.
தூத்துக்குடி வ.உ.சி கல்லூரி மாணவர்கள் உள்பட சுமார் 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மாணவர்களை போலீசார் தடுப்பு வேலிகள் அமைத்து தடுத்து நிறுத்தினர், எனினும் மாணவர்கள் தடுப்புவேலிகளை உடைத்துச் சென்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும், மாணவர்களின் குரல் கேட்கிறதாக மாவட்ட ஆட்சியரே என்றும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் முழக்கமிட்டனர். மாணவர்களின் திடீர் போராட்டத்தால் ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.