துணைவேந்தர்கள் நியமனத்திற்கு எதிர்ப்பு... ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்ட மாணவர் சங்கத்தினர்!
அண்ணா பல்கலைக்கழகம், சட்டப்பல்கலைக்கழகம் உள்ளிட்டவற்றிற்கு வெளி மாநிலத்தவர் துணைவேந்தர்களாக நியமிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்திய மாணவர் சங்கத்தினர் ஆளுநர் மாளிகை முற்றுகைப் போராட்டத்தில் ஈட
சென்னை : அண்ணா பல்கலைக்கழகம், சட்டப்பல்கலைக்கழகம் உள்ளிட்டவற்றிற்கு வெளி மாநிலத்தவர் துணைவேந்தர்களாக நியமிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்திய மாணவர் சங்கத்தினர் ஆளுநர் மாளிகை முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீசார் தடுத்து நிறுத்தியதால் மாணவ அமைப்பினர் ஆளுநர் மாளிகை அருகே திடீரென சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
சென்னை அண்ணா பல்கலைக்கழகம், இசைப் பல்கலைக்கழகம் மற்றும் அம்பேத்கர் சட்டப்பல்கலைக்கழகத்திற்கு வெளிமாநிலத்தவரை துணைவேந்தர்களாக நியமித்ததற்கு பல்வேறு கண்டனக் குரல்கள் எழுந்து வருகின்றன. இந்நிலையில் தமிழகத்தில் சிறந்த கல்வியாளர்கள் இருக்கும் போது வெளி மாநிலத்தவரை துணைவேந்தர்களாக நியமித்ததற்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாக இந்திய மாணவர் சங்கத்தினர் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர்.
சைதாப்பேட்டையில் இருந்து கிண்டி ஆளுநர் மாளிகை நோக்கி பேரணியாக வந்தவர்களை போலீசார் தடுத்து வேலிகளை அமைத்து தடுத்து நிறுத்தினர். இதனால் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். துணைவேந்தர்களாக வெளிமாநிலத்தவர் நியமிக்கப்பட்டவர்களை திரும்பப் பெற வேண்டும் என்று மாணவர்கள் வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர். மாணவர்களின் திடீர் போராட்டத்தால் சைதாப்பேட்டை, கிண்டி சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.