சூரிய குண்டத்தில் குளித்த மாணவர் பலி.. ஈஷா யோகா மையம் சொல்வது என்ன?
சர்ச்சைக்குரிய கோவை ஈஷா யோகா மையத்தின் சூரிய குண்ட குளத்தில் குளித்த மாணவர் ஒருவர் பலியானார்.
கோவை: சர்ச்சைக்குரிய ஈஷா யோகா மையத்தின் தீர்த்த குளத்தில் மூழ்கி மாணவர் ஒருவர் பலியான சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து அந்த உடல் நலம் பாதிக்கப்பட்டவர்கள் இந்த குளத்தில் குளிக்க வேண்டாம் என பார்வையில் படும்படி எச்சரிக்கை பலகைகள் வைக்கப்பட்டு இருப்பதாக கூறியுள்ளது.
கோவை வெள்ளியங்கிரி மலையடிவார வனப்பகுதியில் பலநூறு ஏக்கர் நிலத்தை சட்டவிரோதமாக வளைத்து கடிட்டங்களை கட்டியுள்ளது ஈஷா யோகா மையம். இது தொடர்பான வழக்கில் தமிழக அரசு இத்தகவலை சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தது. ஈஷா யோகா மையத்தின் பெரும்பாலான கட்டிடங்கள் யானைவழித்தடங்களே என்ற குற்றச்சாட்டும் முன்வைக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் ஈஷா யோக மையத்தில் ஆண்கள் குளிப்பதற்கு சூரிய குண்டமும், பெண்கள் குளிக்க சந்திர குண்டமும் அமைக்கப்பட்டுள்ளது. இந்த குண்டங்களில் பாதரசத்தால் செய்யப்பட்ட லிங்கங்கள் குண்டத்தின் நடுவில் வைக்கப்பட்டு இருக்கும்.
பாதரசம் உடலுக்கு தீங்கு விளைவிக்க கூடியது என ஈசா மையத்தின் எதிர்ப்பாளர்கள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றனர். இதனிடையே, ஈஷாவின் சூரிய குண்டம் எனப்படும் ஆண்கள் தீர்த்த குளத்தில் குளித்த வேலூர் கல்லூரி மாணவர் ரமேஷ் நீரில் மூழ்கி பலியானார். இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து அந்த மையம் அளித்துள்ள விளக்கத்தில், வலிப்பு நோய், இருதய பிரச்சினை, வெட்டு காயங்கள் உள்ளிட்ட உடல் நலம் பாதிக்கப்பட்டவர்கள் இந்த குளத்தில் குளிக்க வேண்டாம் என பார்வையில் படும்படி எச்சரிக்கை பலகைகள் வைக்கப்பட்டு இருப்பதாக கூறியுள்ளது. இதனிடையே மாணவர் உயரிழந்த குளத்தின் மாதிரி நீரை போலீசார் ஆய்வுக்காக எடுத்துசென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.