தமிழக பெருமழையை “இஸ்ரோ” துல்லியமாக கணித்தது - மத்திய அரசு தகவல்
சென்னை: தமிழகத்தில் அண்மையில் பெய்த பெருமழைப் பொழிவை இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ துல்லியமாக கணித்தது என்று லோக்சபாவில் மத்திய அரசு தெரிவித்தது.
இது தொடர்பாக லோக்சபாவில் நேற்றைய கேள்வி நேரத்தின் போது திருவண்ணாமலை தொகுதி உறுப்பினர் ஆர். வனரோஜா, "நாட்டில் பருவகால மாற்றத்தைக் கணிக்க தொழில்நுட்பவியல் மேம்பாட்டைப் பயன்படுத்த இஸ்ரோ எவ்வாறு உத்தேசித்துள்ளது" என்று கேள்வி எழுப்பினார்.
இதற்கு பிரதமர் அலுவலக விவகாரம் மற்றும் விண்வெளித் துறை இணையமைச்சர் ஜிதேந்திர சிங் பதில் அளித்துப் பேசுகையில், "தமிழகத்தில் அண்மையில் கட்டுக்கடங்காத மழை வடிவில் பருவநிலை மாற்றம் ஏற்பட்டது. இது இஸ்ரோவால் செயற்கைக்கோள் ஒளிப்படம் மூலம் ஏறக்குறைய 100 சதவீதம் துல்லியமாகக் கணிக்கப்பட்டது" என்றார்.
கனமழை பெய்யும் என்பதால்தான் பிஎஸ்எல்வி சி-29 ராக்கெட் விண்ணில் ஏவும் திட்டத்தை இஸ்ரோவும் தள்ளி வைத்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.