விரைவில் விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் திட்டம்... இஸ்ரோ தலைவர் சிவன்!
விரைவில் விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் திட்டம் தொடங்கப்படும் என்று இஸ்ரோவின் புதிய தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்.
நாகர்கோவில்: விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் திட்டம் விரைவில் தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக இஸ்ரோவின் புதிய தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்.
இந்திய விண்வெளி ஆய்வு மைய தலைவராக நாகர்கோவில் சரக்கல்விளையைச் சேர்ந்த விஞ்ஞானி சிவன் சமீபத்தில் பொறுப்பு ஏற்றார். அதன்பிறகு முதல் முறையாக அவர் சொந்த ஊருக்கு வந்தார். அவருக்கு சரக்கல்விளை ஊர் பொதுமக்கள் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து அவருக்கு பாராட்டு விழா நடந்தது. விழாவில் இஸ்ரோ தலைவர் சிவன் பேசியதாவது, தற்போது இந்தியா விண்வெளி தொழில்நுட்பத்தில் உலக அரங்கில் மிகமிக தன்னிறைவு அடைந்துள்ளது. நமது தொழில்நுட்பத்தை அடுத்த நாடுகள் கடன் பெறும் அளவுக்கு நாம் முன்னேறியுள்ளோம்.
இங்கு இருக்கிற ஒவ்வொருவரின் செல்போன்களும், டி.வி., கம்ப்யூட்டர்கள், ஏ.டி.எம். போன்றவை சேட்டிலைட்களுடன் இணைந்திருக்கின்றன. சேட்டிலைட் ஒரு மணி நேரம் செயல்படாவிட்டால் உலகமே ஸ்தம்பித்துப்போய்விடும். செயற்கைகோள்களானது விவசாயிகள், மீனவர்களுக்கு பயன்படக்கூடியதாக உள்ளது.
இஸ்ரோ தொழில்நுட்பம் மூலம் கேரளாவில் மீனவர்களுக்கு நேவிக் கருவி வழங்கப்படுகிறது. ஜி.பி.எஸ். கருவி எந்த இடத்தில் இருக்கிறோம் என்பதை காட்டக்கூடியது. ஆனால் ஜி.பி.எஸ். நமது நாட்டுக்கு சொந்தமானது அல்ல. சம்பந்தப்பட்ட நாடு நினைத்தால் அதை செயல்படாமல் தடுக்க முடியும். எனவே நாமாக, நமக்காக இந்திய விஞ்ஞானிகள் உருவாக்கிய நேவிக்கேசன் செயற்கைகோளை ஏவியுள்ளோம்.
இஸ்ரோ ஏவ உள்ள சந்திராயன்-2 ராக்கெட் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இதே போன்று ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3 2-வது சேட்டிலைட் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை இஸ்ரோ வைத்துள்ளது. மனிதர்களை ராக்கெட்டில் அனுப்புவதற்கான உடனடி திட்டம் தற்போது எதுவும் இல்லை. ஆனால் விண்வெளிக்கு மனிதனை அனுப்பும் திட்டத்துக்கு நிறைய பொதுவான தொழில்நுட்பங்கள் தேவை. அதற்கான வளர்ச்சித் திட்டங்கள் நடந்து கொண்டிருக்கிறது என்றும் சிவன் கூறியுள்ளார்.