பி.எஸ்.எல்.வி. சி-33 வெற்றி... விண்ணில் நிலை நிறுத்தப்பட்டது ஐஆர்என்எஸ்எஸ் - 1ஜி... மோடி பாராட்டு
ஸ்ரீஹரிகோட்டா: இந்திய கடல்சார் ஆராய்ச்சிக்கான இஸ்ரோவின் ஐஆர்என்எஸ்எஸ் - 1ஜி விண்ணில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டுள்ளது. இந்த சாதனைக்கு காரணமான இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பிரதமர் மோடி தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) செயற்கைகோள்களையும், அவற்றை விண்ணில் ஏவுவதற்கான பி.எஸ்.எல்.வி, ஜி.எஸ்.எல்.வி, ஆகிய இரு வகை ராக்கெட்டுகளையும் தயாரித்து வருகிறது.
அதன்படி, தெற்கு ஆசியாவில் உள்ள கடல் ஆராய்ச்சிக்காக ரூ.1,420 கோடி மதிப்பில் 7 செயற்கைகோள்களை பி.எஸ்.எல்.வி. ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்த இஸ்ரோ திட்டமிட்டு, ஏற்கனவே 6 செயற்கைகோள்களை இரண்டு ஆண்டுகளில் ஒன்றன் பின் ஒன்றாக விண்ணில் செலுத்தி விட்டது.
இந்நிலையில், 7வது செயற்கைக்கோளான ஐ.ஆர்.என்.எஸ்.எஸ். 1-ஜி, பி.எஸ்.எல்.வி. சி-33 ராக்கெட் மூலம் இன்று பகல் 12.50 மணியளவில் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஸ்தவான் ஏவுதளத்தில் இருந்து விண்ணில் ஏவப்பட்டது.
கடந்த 26ம் தேதி இதற்கான 51.5 மணி நேர ‘கவுண்ட்டவுன்' தொடங்கியது. தற்போது விண்ணில் ஐ.ஆர்.என்.எஸ்.எஸ். 1-ஜி செயற்கைக்கோள் நிலைநிறுத்தப்பட்டுள்ளதாக இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இதன்மூலம் இந்த பி.எஸ்.எல்.வி. சி-33 ஏவல் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது நமது இந்திய விண்வெளி ஆராய்ச்சி துறையில் மிகப்பெரிய வெற்றியாகும்.
இந்த செயற்கைக்கோளானது கடல்வழி ஆராய்ச்சிக்காக அனுப்பப்பட்டுள்ளது. இயற்கை பேரிடர் காலங்களில் கடல் பயணத்திற்கு இந்த செயற்கைகோள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
மேலும், இந்த செயற்கைக்கோள் மூலம் 1,500 கிலோமீட்டர் சுற்றளவு பரப்பளவுக்கு கடல் வழிகளையும், கடல் எல்லைகளையும் துல்லியமாக கண்காணிக்க முடியும் என்பது சிறப்பம்சம். இதன்மூலம் தரையிலும், வான்வெளியிலும் செல்லும் அனைத்து வாகனங்களையும் கண்காணிக்க இயலும்.
ஐஆர்என்எஸ்எஸ் - 1 ஜி செயற்கைக்கோள் முழுக்க முழுக்க, நமது இந்திய நாட்டின் முழுமையான தயாரிப்பாகும். இது கடல்சார் ஆராய்ச்சி, இயற்கை சீற்றம், பேரிடர் மேலாண்மை, கடல் வழி போக்குவரத்து உள்பட பல முக்கிய தகவல் தொடர்புக்காக பயன்படுத்தப்படும்.
இந்த செயற்கைகோளின் ஆயுட்காலம் 12 ஆண்டுகள் ஆகும். இது போன்று மேலும் 2 செயற்கைகோள்களை கடல் சார் ஆராய்ச்சிக்காக இஸ்ரோ நிறுவனம் அனுப்ப திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மோடி பாராட்டு:
இஸ்ரோ விஞ்ஞானிகளின் இந்த சாதனைக்கு பிரதமர் மோடி தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்துச்செய்தியில், "விஞ்ஞானிகளால் மக்களுக்கு கொடுக்கப்பட்ட மிகப்பெரிய பரிசு இது. சொந்தமாக ஜிபிஎஸ் வைத்துள்ள 5 நாடுகளில் இந்தியாவும் ஒன்றாகும்.
இந்தியா அனுப்பிய 7 செயற்கை கோள்களும் வெற்றி அடைந்துள்ளன. விண்வெளி ஆராய்ச்சியில் இந்தியா தன்னிறைவு அடைந்துள்ளது. மீனவர்கள் முதல் விமானிகள் வரை அனைவருக்கும் ஜி.பி.எஸ் உதவும். இந்தியாவின் ஜி.பிஎஸ் சேவையை சார்க் நாடுகளும் பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த ஜிபிஎஸ் சேவைக்கு நாவிக் என பெயரிடப்பட்டுள்ளது" எனத் தெரிவித்துள்ளார்.