அதி நவீன 'இன்சாட்-3டி.ஆர்.' செயற்கைக்கோளுடன் ஜி.எஸ்.எல்.வி ராக்கெட்டை வெற்றிகரமாக ஏவியது இஸ்ரோ #isro
சென்னை: இன்சாட்-3டிஆர் செயற்கைகோளுடன் ஜி.எஸ்.எல்.வி-எப்05 ராக்கெட் இன்று வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது. இதற்கான 29 மணி நேர கவுண்ட்டவுன் நேற்று (புதன்கிழமை) காலை 11.10 மணிக்கு தொடங்கியது.
ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டா சதீஷ்தவான் விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் இருந்து இன்சாட்-3டிஆர் செயற்கைகோளுடன் ஜி.எஸ்.எல்.வி-எப்05 ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டது. இது இந்தியாவின் 10-வது 'ஜி.எஸ்.எல்.வி' ராக்கெட் ஆகும்.
மாலை 4:10 மணிக்கு ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள 2வது ஏவுதளத்தில் இருந்து இந்த ராக்கெட்டை விண்ணில் செலுத்த இஸ்ரோ திட்டமிட்டிருந்தது. ஆனால், ராக்கெட் ஏவும் நேரம் 40 நிமிடம் தள்ளிவைக்கப்பட்டு 4.50 மணிக்கு விண்ணில் ஏவப்பட்டது.
இந்த ராக்கெட்டில் எடுத்துச் செல்லப்படும் செயற்கைகோள் 'இன்சாட்-3டிஆர்' வானிலை, பருவநிலை மாற்றம் தொடர்பான தகவல்களை பெறுவதற்காக அனுப்பப்பட்டுள்ளது.
ராக்கெட்டில் பொருத்தப்பட்டுள்ள 'இன்சாட்-3டிஆர்' செயற்கைகோள் அதிநவீன வகையில் வானிலை தொடர்பான தகவல்கள், கடல்போக்குவரத்தை ஒழுங்குபடுத்துதல், ராணுவத்துக்கு தேவையான தகவல்களை பெறும் வகையில் வடிவமைக்கப்பட்டு உள்ளது.
GSLV FO5 INSAT-3DR launched successfully from the Satish Dhawan Space Centre, Sriharikota pic.twitter.com/YWg1NXBEbI
— MIB India (@MIB_India) September 8, 2016
இந்த செயற்கைகோளின் எடை 2,211 கிலோ ஆகும். பூமியில் இருந்து இந்த செயற்கைகோள் 230 கிலோ மீட்டர் தொலைவில் நிலை நிறுத்தப்படும். இந்த செயற்கைகோளில் நவீன பேட்டரிகள் மற்றும் நவீன கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. இதன் ஆயுட்காலம் 10 ஆண்டுகள் ஆகும்.
ராக்கெட் வெற்றிகரமான விண்ணில் சீறிப் பாய்ந்ததும், சதீஷ்தவான் விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் இருந்த விஞ்ஞானிகள் கை தட்டி உற்சாகத்தை வெளிப்படுத்தியதோடு, ஒருவருக்கொருவர் கை கொடுத்து வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டனர்.