8 செயற்கைக்கோள்களுடன் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்வி சி-35 ராக்கெட்
சென்னை: ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவண் விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் முதலாவது ஏவுதளத்திலிருந்து இன்று இன்று காலை பிஎஸ்எல்வி சி-35 ராக்கெட் வெற்றிகரமாக ஏவப்பட்டது. இதில் பருவநிலை தொடர்பான ஆய்வுக்காக 371 கிலோ எடை கொண்ட 'ஸ்காட்சாட்-1' என்ற செயற்கைக்கோள் அனுப்பப்பட்டது.
வானிலை முன்னறிவிப்பு குறித்த தகவல்களை இந்த செயற்கைக்கோள் மூலம் பெற இயலும். வானிலை மாற்றம், புயல் சின்னம் போன்றவற்றை முன்கூட்டியே அறியக்கூடிய, 'ஸ்கேட் சாட் 1' செயற்கைகோளுடன், அமெரிக்கா, அல்ஜீரியா, கனடா உள்ளிட்ட நாடுகளின், எட்டு செயற்கை கோள்களுடன், இன்று விண்ணில் செலுத்தப்பட்டது.
அல்ஜீரியா நாட்டு செயற்கைக்கோள் 3, கனடா, அமெரிக்கா ஆகிய நாடுகளைச் சேர்ந்த தலா ஒரு செயற்கைக்கோள், இந்தியாவைச் சேர்ந்த 2 பல்கலைக்கழகங்கள் உருவாக்கிய செயற்கைக்கோள்களும் இதில் அடங்கும்.
இந்த செயற்கைக் கோள் பூமியில் இருந்து 720 கிலோ மீட்டர் உயரத்தில் சுற்றுப்பாதையில் நிலை நிறுத்தப்படுகிறது. இதன் ஆயுள்காலம் 5 ஆண்டுகள் ஆகும். இதற்கான கவுண்டவுன் கடந்த சனிக்கிழமை காலை 8 மணி 42 நிமிடங்களுக்கு தொடங்கியிருந்தது. இந்த வெற்றிக்காக பிரதமர் நரேந்திர மோடி இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பாராட்டு தெரிவித்துள்ளார்.