ஜெ. உடல்நிலையை முன்வைத்து சைக்கிள் கேப்பில் 'சிங் ஜாங்' கெடா வெட்டிய தா.பாண்டியன்
ஈரோடு: தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து ஆளும் கட்சியினர் விளக்க வேண்டும் என்று கோரிக்கையை முன்வைத்த கோரிக்கையோடு "தமிழக அரசு மிகவும் சிறப்பாக" செயல்படுகிறது என்று பாராட்டு பத்திரமும் வாசித்திருக்கிறார் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா. பாண்டியன்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஈரோடு மாவட்ட தலைமை அலுவலக புதிய கட்டிட அடிக்கல் நாட்டு விழா நேற்று நடைபெற்றது. இதில் கலந்து கொள்ள ஈரோடு வந்த அக் கட்சியின் தேசிய நிர்வாகக்குழு உறுப்பினர் தா.பாண்டியன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தொழிற்சங்கமான ஏ.ஐ.டி.யு.சி. தேசிய மாநாடு வருகிற டிசம்பர் மாதம் 15-ந் தேதி முதல் 18-ந் தேதி வரை கோவையில் நடைபெறுகிறது. இதில் 4 ஆயிரம் பங்கேற்கின்றனர்.
மோடி தலைமையிலான அரசு அமைந்ததில் இருந்து சட்டத்துறை, நிலம், தொழிலாளர்களுக்கு எதிரான பல சட்டங்களை திருத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு உள்ளனர். நிலம் கையகப்படுத்தும் சட்டத்தை நிறைவேற்ற அவசர சட்டமாக கொண்டு வந்து உள்ளது. இது நிலம் கையகப்படுத்தும் சட்டம் இல்லை. நிலத்தை பறிமுதல் செய்யும் சட்டம். எனவேதான் இதை இடதுசாரிகள் மட்டுமின்றி பா.ஜ.க. கூட்டணியில் இருக்கும் கட்சிகளும் எதிர்த்து வருகின்றன.
கம்யூனிஸ்டுகளுக்கு கட்டாய ஹெல்மெட்
தமிழகத்தில் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. இதை நீதிமன்றத்தின் உத்தரவாகவோ, போலீசாருக்கு பயந்து கொண்டோ அணிவது என்ற நிலையை மாற்றி, அனைவருக்கும் தேவை என்ற மனநிலையுடன் ஹெல்மெட் அணிய வேண்டும். குறிப்பாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தொண்டர்கள், தொழிற்சங்கத்தினர் கண்டிப்பாக ஹெல்மெட் அணிய வேண்டும்.
20-ந் தேதி போராட்டம்
மோடி அரசின் வகுப்புவாதம், தேச விரோத, மக்கள் விரோத நடவடிக்கையை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வருகிற 20-ந் தேதி தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் உள்பட பல்வேறு போராட்டங்கள் நடைபெறும்.
ஜெ. உடல்நிலை
பொதுவாக நிர்வாக பொறுப்பில் இருப்பவர்கள் தங்கள் உடல் நலம் குறித்து சந்தேகங்கள் எழும்போது, அதை மருத்துவ அதிகாரிகள் மூலமோ, உரிய நபர்கள் மூலமோ அதிகாரப்பூர்வமாக தெரிவிப்பது வழக்கம்.
தமிழக முதல்வர் ஜெயலலிதா மீது அன்பு கொண்ட தொண்டர்கள், அவருக்கு சிறு தண்டனை என்றாலே கோவில்களுக்கு சென்று மொட்டை போடும் அளவுக்கு அன்பும் பக்தியும் கொண்டவர்கள். அவர்களுக்காக ஜெயலலிதா உடல் நிலை குறித்தும், நிர்வாக பொறுப்பில் இருப்பவர் என்கிற முறையில் மக்களுக்காகவும் ஆளும் கட்சியினர் அவரது உடல் நிலை குறித்த தகவல்களை தெளிவுபடுத்த வேண்டும்.
ஏற்கனவே எம்.ஜி.ஆர். உடல்நிலை சரியில்லாமல் அமெரிக்க மருத்துவமனையில் இருந்தபோதும் இங்கு தேர்தலில் வெற்றி பெற்றார். நிர்வாகம் நடந்தது. எனவே இது தமிழகத்துக்கு புதிது அல்ல.
பேஷ் பேஷ் நிர்வாகம் நன்னா இருக்கே
தமிழகத்தில் நிர்வாகம் இப்போது நன்றாகவே இருக்கிறது. யுனிசெப் நிறுவனம் தனது அறிக்கையில் தமிழகம் அனைத்து துறையிலும் முதலிடத்தில் இருப்பதாக அறிவித்து உள்ளது.
7 தமிழரை விடுதலை செய்க
ராஜிவ் காந்தி கொலை வழக்கில் 7 தமிழரையும் விடுதலை செய்ய வேண்டும். உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ள பேரறிவாளனை உடனடியாக நிபந்தனையின்றி விடுதலை செய்ய வேண்டும்.
இவ்வாறு தா.பாண்டியன் கூறினார்.
அது போன மாதம்..
இதே தா. பாண்டியனின் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிதான் கடந்த மாதம் ஆர்.கே.நகர் சட்டசபை தேர்தலில் அண்ணா திமுக வேட்பாளராகப் போட்டியிட்ட முதல்வர் ஜெயலலிதாவை எதிர்த்து களம் கண்டு கடுமையான விமர்சனங்களை முன்வைத்தது. 'அது போன மாதம்.. இது இந்த மாதம்' என்கிற வடிவேலு வசனத்தைப் போல.. ஜெயலலிதா அரசு சிறப்பாக செயல்படுகிறது என்று நற்சான்றிதழ் கொடுத்துள்ளார் தா. பாண்டியன்.