சென்னையில் சசிகலா குடும்ப பினாமியின் ரூ380 கோடி சொத்து முடக்கம்?
சென்னையில் சசிகலா குடும்ப பினாமியின் ரூ380 கோடி சொத்து முடக்கப்பட்டுள்ளது.
சென்னை: சசிகலா குடும்பத்தின் பினாமிக்கு சொந்தமான ரூ380 கோடி சொத்தை சென்னையில் வருமான வரித்துறை அதிகாரிகள் முடக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. வருமான வரித்துறையின் இந்நடவடிக்கையால் தினகரன் தரப்பு கடும் அதிர்ச்சி அடைந்துள்ளது.
சசிகலா குடும்பத்தினர் மற்றும் பினாமிகள் வீடுகள், நிறுவனங்களில் ஒரே நேரத்தில் வரலாறு காணாத மிகப் பெரும் வருமான வரி சோதனையை அண்மையில் அதிகாரிகள் நடத்தினர். அதில் ரூ4,000 கோடிக்கும் அதிகமான சட்டவிரோத சொத்துகள் கண்டுபிடிக்கப்பட்டன.
போலி நிறுவனங்கள், பினாமிகள் மூலம் பல ஆயிரம் கோடி மதிப்பிலான சொத்துகளை சசிகலா குடும்பம் வாங்கி குவித்திருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து வருமான வரித்துறை அதிகாரிகள் இச்சொத்துகள் தொடர்பாக் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் சென்னை எம்.ஆர்.சி. நகரில் ஆதி எண்டர்பிரைசஸ் என்ற நிறுவனத்திற்கு சொந்தமான ரூ 380 கோடி ரூபாய் மதிப்பிலான 4.3 ஏக்கர் ஃபிர்ஹெவன் எஸ்டேட்டை வருமான வரித்துறை அதிகாரிகள் முடக்கி வைத்துள்ளனர். குஜராத்தின் சுனில் கெட்பாலியா, மனீஷ் பார்மர் ஆகியோருக்கு இந்த எஸ்டேட் சொந்தமானது.
இவர்கள் சசிகலா குடும்பத்தின் பினாமி என கருதுகிறது வருமான வரித்துறை. ஆதி எண்டர்பிரைசஸ் பணப் பரிமாற்றத்தை மட்டுமே நடத்தி வந்ததால் கருப்பு பணத்தை மாற்றும் நிறுவனமாக இது செயல்பட்டிருக்கிறது. ஆகையால் வருமான வரித்துறை அதிகாரிகள் இந்நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.
வருமான வரித்துறையின் இந்த அதிரடி நடவடிக்கை தினகரன் தரப்பை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.