வாக்காளர்களுக்கு லஞ்சம்... சிக்கிய அமைச்சர்கள் அனைவருக்கும் சிக்கல்- போகுது சம்மன்?
ஆர்.கே.நகரில் பணப்பட்டுவாடா செய்யதாக கிடைத்த பட்டியல் தொடர்பாக அமைச்சர்கள், நிர்வாகிகளுக்கும் நோட்டீஸ் அனுப்ப வருமான வரித்துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.
சென்னை : அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் பட்டியலில் இருந்த அமைச்சர்கள், அதிமுக நிர்வாகிகளிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பட்டியலில் இருந்த அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி, திண்டுக்கல் சீனிவாசன், செல்லூர் ராஜூ, டி.ஜெயக்குமார் ஆகியோரிடமும் வருமான வரித்துறையினரின் விசாரணை வளையம் நீளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதேபோல முன்னாள் அமைச்சர்கள் கோகுல இந்திரா, வீரமணி, அக்ரி கிருஷ்ணமூர்த்தி அதிமுக நிர்வாகிகள், எம்.பிக்கள் என பட்டியலில் இருந்த அனைவருக்கும் வருமான வரித்துறை அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்பப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது.
வருமான வரித்துறை ரெய்டு
அமைச்சர் விஜயபாஸ்கரின் வீடு, அலுவலகம், குவாரி உள்ளிட்ட 36 இடங்களில் கடந்த 7 மற்றும் 8 ஆகிய தேதிகளில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை மேற்கொண்டனர். சோதனையில் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்யப்பட்டது குறித்த ஆவணங்கள் மற்றும் அவரது உதவியாளர்களின் வீடுகளில் கோடிக்கணக்கான ரூபாய் பணமும் சிக்கியது.
அதிகாரிகள் விசாரணை
கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் தொடர்பாக ஏப்ரல் 10ஆம் தேதி அமைச்சர் விஜயபாஸ்கர், நடிகர் சரத்குமார் உள்ளிட்டோருக்கு வருமான வரித்துறை அலுவலகத்தில் நேரில் ஆஜராகி விளக்கமளிக்குமாறு சம்மன் அனுப்பப்பட்டது. அதன்படி ஆஜரான விஜயபாஸ்கரிடம் அதிகாரிகள் 4 மணி நேரம் விசாரணை நடத்தினர்.
கீதாலட்சுமி
விசாரணைக்கு வராமல் டிமிக்கி கொடுத்த பல்கலைக்கழக துணைவேந்தர் கீதாலட்சுமிக்கும் 2வது முறையாக நோட்டீஸ் அனுப்ப அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். இந்த நிலையில் பணப்பட்டுவாடா தொடர்பாக விசாரணை எல்லையை அதிகரிக்க உள்ளனர்.
அமைச்சர்கள் லிஸ்ட்
டிடிவி தினகரனுக்காக ஆர்.கே. நகரில் ரூ.89 கோடி பணத்தை . அமைச்சர்களில் யார்-யார் எவ்வளவு பணப்பட்டு வாடா செய்தனர் என்ற பட்டியல் சனிக்கிழமையன்று வெளியானது. அதில் அமைச்சர்கள் செங்கோட்டையன், திண்டுக்கல் சீனிவாசன், பி.தங்கமணி, எஸ்.பி.வேலுமணி, டி.ஜெயக்குமார், செல்லூர் ராஜூ ஆகிய அமைச்சர்கள் பெயர் இடம் பெற்றுள்ளது.
|
கோடிக்கணக்கில் பணம்
அந்தப்பட்டியலில் கே.ஏ செங்கோட்டையன் ரூ.13 கோடியே 13 லட்சத்து 20 ஆயிரம், எடப்பாடி பழனிச்சாமி ரூ.13 கோடியே 27 லட்சம், டி . ஜெயக்குமார் ரூ.11 கோடியே 68 லட்சம், எஸ்.பி. வேலுமணி ரூ. 14 கோடியே 91 லட்சம், தங்கமணி 12 கோடியை 62 லட்சம், திண்டுக்கல் சீனிவாசன் ரூ. 12 கோடியே 83 லட்சம், செல்லூர் ராஜூ 48 லட்சம், வி.எம். ராஜலட்சுமி ரூ.45 லட்சம் என தலைக்கு எவ்வளவு பணம் பட்டுவாடா செய்யப்பட வேண்டும் என்று பட்டியலிடப்பட்டுள்ளது. இந்த பட்டியல் போலியானது என்று அமைச்சர்கள் கூறி வருகின்றனர். எனினும் பட்டியலில் உள்ள இந்த 6 அமைச்சர்களுக்கும் வருமான வரித்துறை விரைவில் நோட்டீஸ் அனுப்ப முடிவு செய்துள்ளனர்.
கோகுல இந்திரா
6 அமைச்சர்களிடமும் நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமான வரித்துறை அலுவலகத்தில் வைத்து விசாரணை நடைபெறும் என்று தெரிகிறது. அமைச்சர்கள் தவிர அதிமுக எம்.பி.க்கள் வைத்திலிங்கம் 13 கோடியே 13 லட்சம், ராஜன் செல்லப்பா, முன்னாள் அமைச்சர்கள் வீரமணி, அக்ரி கிருஷ்ணமூர்த்தி, மாதவரம் மூர்த்தி, கோகுல இந்திரா, பாப்புலர் கே. முத்தையா, நெல்லை கேஆர்.பி பிரபாகரன் ஆகியோரது பெயரும் பணப்பட்டுவாடா செய்யப்பட்டதாக உள்ள பட்டியலில் உள்ளது. அவர்களிடமும் விசாரிக்க அதிகாரிகள் தயாராகி வருகிறார்கள்.