தமிழ்ப் படங்களையும் மிஞ்சிய திக்திக் ரெய்டு.. மன்னார்குடியில் என்ன நடக்கிறது?
சசிகலா சொந்தங்களுக்கு பவர் சென்டராக இருக்கும் மன்னார்குடியில் ஒரே நேர்த்தில் 10 இடங்களில் வருமான வரி சோதனை நடத்தப்பட்டு இருக்கிறது.
Recommended Video
மன்னார்குடி: சசிகலா சொந்தங்களுக்கு பவர் சென்டராக இருக்கும் மன்னார்குடியில் ஒரே நேர்த்தில் 10 இடங்களில் வருமான வரி சோதனை நடத்தப்பட்டு இருக்கிறது. காலை 6.30 மணிக்கு ஆரம்பித்த சோதனை இன்னும் முடியாமல் நடந்து கொண்டு இருக்கிறது.
மன்னார்குடியை கட்டுப்பாட்டில் வைத்து இருக்கும் திவாகரன் தற்போது தீவிரமாக விசாரிக்கப்பட்டு வருகிறார். அங்கு இருக்கும் தினகரனுக்கு சொந்தமான வீடும், திவாகரனின் வீடும் ஒரே நேரத்தில் சோதனை செய்யப்பட்டுள்ளது.
மொத்த மன்னார்குடியையே கையில் வைத்து இருந்த சசிகலா குடும்பத்தை தற்போது வருமான வரித்துறை அதிகாரிகள் தங்கள் கையில் வைத்து இருக்கிறார். கடந்த 5 மணி நேரத்தில் தமிழ்ப் படத்திற்கு இணையான காட்சிகள் அங்கு நடந்து இருக்கிறது.
காலையில் தொடங்கியது
மன்னார்குடியில் முதலில் திவாகரனுக்கு சொந்தமான கல்லூரியில்தான் சோதனை தொடங்கியது. சென்னையில் ஜெயா டிவி அலுவலகம் சோதனை செய்யப்பட்ட 10 நிமிட இடைவெளியில் இங்கும் சோதனை நடந்து இருக்கிறது. சோதனை அதிகாரிகள் நேரடியாக கல்லூரி வளாகத்திற்குள் சென்று வெளி கதவை சாத்திவிட்டு சோதனை செய்து இருக்கின்றனர். மேலும் அந்த கல்லூரியின் அனைத்து விதமான தொலைத்தொடர்பு சாதனங்களும் அணைத்து வைக்கப்பட்டு இருக்கிறது.
திவாகரனுக்கு தகவல் தெரியாது
திவாகரனுக்கு தனது கல்லூரியில் ரெய்ட் நடக்கும் விஷயம் தெரியும் முன்பே அவரது வீட்டிற்குள் புகுந்து இருக்கிறது வருமான வரித்துறை. அதன் பின்பே அவருக்கு தனது கல்லூரியில் சோதனை நடக்கும் விஷயம் தெரிந்து இருக்கிறது. 7 மணிக்கு முன்பு தொடங்கிய இந்த சோதனை இன்னும் நடந்து வருகிறது . சோதனை அதிகாரிகளில் பாதி பேர் அங்கு இருக்கின்றனர்.
திவாகரனின் நண்பரும் சிக்கினார்
திவாகரனின் வீட்டில் சோதனை நடந்து கொண்டிருந்த அதே சமயத்தில் அவரது நெருங்கிய நண்பர் அன்புவின் வீட்டுக்கு ரெய்ட் வந்தவர்களின் கார் பறந்து இருக்கிறது. இவரிடம் திவாகரனின் சொத்து சம்பந்தப்பட்ட நிறைய தகவல்கள் இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் திவாகரனின் கல்லூரியை தனது கட்டுப்பாட்டில் வைத்து இருப்பது இவர்தான் என்றும் கூறப்படுகிறது.
யாரும் இல்லாத இடம்
இந்த நிலையில் மன்னை நகரில் இருக்கும் தினகரனுக்கு சொந்தமான வீட்டுக்கும் விசாரணை அதிகாரிகள் சென்று உள்ளனர். அந்த வீடு சமயங்களில் திவாகரனாலும் பயன்படுத்தப்படும். இந்த நிலையில் பெரும்பாலும் யாரும் வசிக்காத அந்த வீட்டையும் அதிகாரிகள் சோதனை செய்து இருக்கின்றனர். அந்த வீட்டில் உள்ள பணியாளர்களை வெளியேற விடாமல் விசாரித்து வருகின்றனர்.
காரில் அழைத்து செல்லப்பட்டார்
சுந்தரக்கோட்டை திவாகரன் வீட்டில் விசாரணை நடக்கும் போதே, அவரை காரில் ஏற்றி போலீசார் ரிஷியூருக்கு அழைத்து சென்றனர். ரிஷியூரில் அவருக்கு இருக்கும் இன்னொரு வீட்டில் தற்போது தீவிர சோதனை நடைபெறுகிறது. அங்குதான் அவர் தந்து ஒய்வு நாட்களை கழிப்பார் என்பது குறிப்பிடத்தக்கது. அங்கு வைத்துதான் அவர் விசாரிக்கப்பட்டு வருகிறார்.
நொடி கணக்கில் ஸ்கெட்ச் வைத்த அதிகாரிகள்
காலையில் இருந்து கடந்த 5 மணி நேரமாக நடத்த அனைத்து விஷயங்களும் முறையாக திட்டமிடப்பட்டு நடத்தப்பட்டு இருக்கிறது. மொத்தம் பத்து இடங்களில் சோதனை செய்யப்பட்டது . இதில் அவரின் டிரைவர், செயலாளர், வக்கீல் ஆகியோரின் வீடும் அடக்கம். அனைத்து இடங்களும் 10 நிமிட இடைவெளியில் சோதனைக்கு உள்ளாகி இருக்கிறது. ஒவ்வொரு இடத்திலும் 5 பேர் என 50க்கும் அதிகமான அதிகாரிகள் மன்னார்குடியில் சோதனையில் உள்ளனர். முதல்முறையாக வருமான வரி சோதனைக்கு ரிசர்வ் போலீஸ் இல்லாமல் , தமிழக போலீஸ் படையே பயன்படுத்தப்பட்டு இருக்கிறது.