போயஸுடன் தொடர்புடைய சேகர் ரெட்டியுடன் "லிங்க்": தலைமை செயலர் ராமமோகன் ராவ் வீட்டில் ஐடி ரெய்டு!
தமிழக அரசு தலைமை செயலர் ராமமோகன் ராவ் வீட்டில் ஐடி அதிகாரிகள் ரெய்டு நடத்தி ஏராளமான ஆவணங்களைப் பறிமுதல் செய்துள்ளனர்.
சென்னை: தமிழக அரசு தலைமை செயலர் ராமமோகன் ராவ் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று அதிரடி சோதனை நடத்தினர். பல மணிநேரம் நீடித்த இந்த சோதனையில் ஏராளமான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
தமிழக அரசின் முதன்மை கான்டிராக்டராக இருப்பவர் சேகர் ரெட்டி. போயஸ் கார்டனுக்கு மிக நெருக்கமான சேகர் ரெட்டி வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
இச்சோதனையில் ரூ131 கோடி ரொக்கம், 171 கிலோ தங்கக் கட்டிகள் சிக்கின. இவற்றில் பெரும்பகுதி 5 மூத்த அமைச்சர்களுக்கு சொந்தமானது என தெரியவந்தது.
இதையடுத்து சேகர் ரெட்டி மீது அமலாக்கப் பிரிவு மற்றும் சிபிஐ அதிகாரிகள் வழக்குப் பதிவு செய்தனர். இதனிடையே தமிழக அரசின் தலைமை செயலர் ராமமோகன் ராவ் வீட்டிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று காலை 5.13 மணி முதல் சோதனை நடத்தினர்.
சேகர் ரெட்டி வீட்டில் சிக்கிய ஆவணங்களின் அடிப்படையில் ராமமோகன் ராவ் வீட்டிலும் பல மணிநேரம் சோதனை நடத்தி ஏராளமான ஆவணங்களைக் கைப்பற்றினர். இச்சோதனை நடந்து கொண்டிருந்த போதே சேகர் ரெட்டி மற்றும் அவரது நண்பர் சீனிவாசலுவை சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கில் சிபிஐ அதிகாரிகள் கைது செய்து சிறையில் அடைத்தனர்.