மிடாஸ், கோவை தனியார் கல்லூரியில் 2வது நாளாக ரெய்டு- சசிகலா உறவுகளை விரட்டும் ஐடி துறை
மிடாஸ் மதுபான ஆலை, கோவை தனியார் கல்லூரியில் இரண்டாவது நாளாக இன்று வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டுள்ளனர்.
Recommended Video
சென்னை: சசிகலா உறவினர்களுக்குச் சொந்தமான மிடாஸ் மதுபான ஆலை, இளவரசியின் மருமகன் வீடு, கோவை தனியார் கல்லூரியில் இரண்டாவது நாளாக இன்று வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டுள்ளனர்.
சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற சசிகலா, தற்போது பெங்களூரு சிறையில் உள்ளார். கடந்த நவம்பர் 9ஆம் தேதி முதல் 13ஆம் தேதி வரை சசிகலா, தினகரன் அவர்களுடன் தொடர்புடையவர்களின் வீடு, அலுவலகங்கள், எஸ்டேட்கள் உள்ளிட்ட 200 இடங்களில் ஒரேநேரத்தில் வருமான வரித் துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர்.
சென்னை, தஞ்சை, திருச்சி, நாமக்கல், கோவை, கொடநாடு உள்ளிட்ட இடங்களிலும் பெங்களூரு, ஹைதராபாத், புதுச்சேரியிலும் 2000 பேர் ஒரே நேரத்தில் சோதனை நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. சோதனையின் முடிவில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக தகவல் வெளியானது.
அலுவலகத்தில் விசாரணை
இதைத் தொடர்ந்து விவேக், கிருஷ்ணபிரியா, ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றன் உள்ளிட்டவர்களை நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமான வரித்துறை அலுவலகத்துக்கு வரவழைத்து தனித் தனியாக அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அனைத்து தகவல்களும் டெல்லியில் உள்ள அதிகாரிகளுக்கு உடனடியாக அனுப்பி வைக்கப்பட்டன.
ஐடி ரெய்டு தொடர்கிறது.
இந்நிலையில் சசிகலா உறவினர், இளவரசியின் மருமகன் கார்த்திகேயனுக்கு சொந்தமான இடம் உட்பட 14 இடங்களில் வருமானவரி அதிகாரிகள் நேற்று 2வது முறையாக திடீர் சோதனை மேற்கொண்டனர். இன்றும் இரண்டாவது நாளாக வருமான வரித்துறை சோதனை நடைபெறுகிறது
கார்த்திக்கேயன் வீடு
படப்பை அருகே மணிமங்கலத்தில் உள்ள தனியார் நிறுவனத்தின் குடோன், அடையார் இந்திரா நகரில் உள்ள இளவரசி மருமகன் கார்த்திகேயன் வீடு, மண்ணடியில் உள்ள கார்த்திகேயனின் நண்பர் குடோனில் சோதனை நடைபெற்றது.
மிடாஸ் ஆலைக்கு பெட்டி அனுப்பும் நிறுவனம்
மணிமங்கலத்தில் உள்ள குடோன், மிடாஸ் மதுபான ஆலைக்கு பாட்டில்கள், அட்டைப் பெட்டிகள் சப்ளை செய்யும் ஸ்ரீசாய் எண்டர்பிரைசஸ் நிறுவனத்தின் உரிமையாளர் சந்திரசேகருக்கு சொந்தமானது என கூறப்படுகிறது. இந்த சோதனையில், பல முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
சீல் வைக்கப்பட்ட அறைகள் திறப்பு
ஸ்ரீசாய் குடோனில் சோதனையை முடித்துக் கொண்டு வருமான வரி அதிகாரிகள் படப்பையில் உள்ள மிடாஸ் மதுபான ஆலைக்கு சென்றனர். நவம்பர் மாதம் மிடாஸ் மதுபான ஆலையில் நடத்திய சோதனையின் போது கைப்பற்றப்பட்ட ஆவணங்களை வருமான வரி அதிகாரிகள் அங்குள்ள ஒரு அறையில் வைத்து பூட்டி சீல் வைத்து இருந்தனர். அதிகாரிகள் நேற்று அந்த அறையை திறந்து ஆவணங்களை ஆய்வு செய்தனர்.
கோவையில் சோதனை
கோவையை அடுத்த மயிலேறிபாளையத்தில் எஸ்.வி.எஸ். பொறியியல் கல்லூரி உள்ளது. இந்த கல்லூரியின் உரிமையாளர் சந்திரசேகர். இவர் மிடாஸ் நிறுவனத்துக்கு காலி பாட்டில்கள் சப்ளை செய்து வருகிறார். இந்த நிலையில் 5 பேர் கொண்ட வருமான வரித்துறை குழுவினர் நேற்று காலை எஸ்.வி.எஸ். கல்லூரிக்கு சென்று சோதனை நடத்தினார்கள். மாலை வரை நீடித்த இந்த சோதனையில் பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்கள் குறித்து வருமான வரித்துறை அதிகாரிகள் தகவல் எதுவும் தெரிவிக்கவில்லை.
14 இடங்களில் சோதனை
தஞ்சாவூரில் உள்ள அதன் தாளாளர் வீடு உள்ளிட்ட இடங்களில் சோதனை நடத்தப்பட்டதாக வருமான வரித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன. இந்த நிலையில் இன்று 2வது நாளாக மயிலேறிபாளையத்தில் உள்ள தனியார் கல்லூரியில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டுள்ளனர். மிடாஸ் மதுபான ஆலை மணிமங்கலத்தில் உள்ள குடோன், மிடாஸ் மதுபான ஆலைக்கு பாட்டில்கள், அட்டைப் பெட்டிகள் சப்ளை செய்யும் ஸ்ரீசாய் எண்டர்பிரைசஸ் நிறுவனத்திலும் இரண்டாவது நாளாக சோதனை நடைபெற்று வருகிறது.