அவமதிக்கப்பட்ட ஐடி அதிகாரிகள்- தள்ளிவிடப்பட்ட சிஐஎஸ்எஃப் வீரர்- விஜயபாஸ்கர் மீது வழக்கு?
வருமான வரி துறை சோதனையின்போது சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர் விதிகளை மீறியதாகவும், பாதுகாப்புப் படை வீரரை பிடித்து தள்ளியதாகவும் வழக்கு பதிவு செய்யப்பட இருப்பதாக கூறப்படுகிறது.
சென்னை: ஆர்.கே.நகர் பணப்பட்டுவாடா தொடர்பாக வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியபோது அவர்களை இழிவாக நடத்தியதாகவும், பாதுகாப்பு படை வீரரை பிடித்து தள்ளியதாகவும் அமைச்சர் விஜயபாஸ்கர் மீது வழக்கு பதிவு செய்யப்பட உள்ளது.
ஆர்.கே.நகரில் இடைதேர்தலில் வெற்றி பெற வாக்காளர்களை விலைக்கு வாங்க கோடிக்கணக்கிலான பணம் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக கிடைத்த தகவலின்பேரில் நேற்று முந்தைய தினம் தமிழகம் முழுவதும் 35 இடங்களில் வருமான வரித்துறையினர் திடீர் சோதனை நடத்தினர். அந்த சோதனையில் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் வீடும் அடங்கும்.
இதுதொடர்பான அறிக்கையை தேர்தல் ஆணையத்துக்கு வருமான வரித் துறையினர் தாக்கல் செய்துள்ளனர். அந்த அறிக்கையில் 2 விஷயங்கள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன. ஒன்று முறைகேடாக பணம் விநியோகம், மற்றொன்று சிஐஎஸ்எஃப் வீரரை அமைச்சர் விஜயபாஸ்கர் பிடித்து தள்ளியது ஆகும்.
அதாவது வீட்டில் வருமான வரித் துறையினர் சோதனை நடத்தும் போது சம்பந்தப்பட்ட நபர் வீட்டை விட்டு வெளியே எங்கும் செல்லக் கூடாது என்பது விதியாகும். ஆனால் விஜயபாஸ்கரோ சோதனை நடத்த வந்த அதிகாரிகளை அவமதித்தது மட்டுமல்லாமல் வெளியே சென்று ஊடகங்களுக்கு பேட்டியளித்தார்.
இதை தடுக்க முயன்ற மத்திய தொழிலக பாதுகாப்பு படை வீரரை பிடித்து தள்ளியாக கூறப்படுகிறது. இந்த இரு காரணங்களுக்காக அமைச்சர் விஜயபாஸ்கர் மீது வழக்கு பதிவு செய்ய முடிவு செய்துள்ளதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.