'ஆட்டோ சங்கர்' பாணியில் அதிமுக ஒ.செ வீட்டில் பணமூட்டை புதைப்பு-'நத்தம்' டைரி குறிப்புகளில் 'திடுக்'
சென்னை: அதிமுக ஒன்றிய செயலர் ஒருவரது வீட்டில் பண மூட்டைகள் புதைத்து வைக்கப்பட்டுள்ளதாக முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் கைப்பற்றிய டைரி ஒன்றில் எழுதப்பட்டிருந்தது குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.
முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன், சென்னை மேயர் துரைசாமி உள்ளிட்டோர் வீடுகளில் அண்மையில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையின் போது ஏராளமான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.
நத்தம் குடும்பத்துக்கு சொந்தம்
இதனடிப்படையில் நத்தம் விஸ்வநாதன், அவரது மகன் அமர்நாத், துரைசாமி மகன் வெற்றி ஆகியோரிடம் தொடர்ந்து வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விசாரணையில் தேர்தலின் போது கரூர் அன்புநாதன் வீட்டில் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட ரூ5 கோடி பணம் நத்தம் விஸ்வநாதன் குடும்பத்துக்குரியது என கண்டுபிடிக்கப்பட்டது.
நிலக்கரி வயல்கள் குறித்தும்...
தொடர்ந்து நத்தம் விஸ்வநாதனின் வருமானத்துக்கு அதிகமான சொத்து விவரங்கள் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. நத்தம் விஸ்வநாதன் குடும்பத்துக்கு சொந்தமானதாக கூறப்படும் இந்தோனேசிய நிறுவனங்கள், நிலக்கரி வயல்கள் குறித்தும் விசாரிக்கப்பட்டு வருகிறது.
பணம் புதைப்பு
இதனிடையே நத்தம் விஸ்வநாதனின் வீட்டில் கைப்பற்றப்பட்ட டைரி ஒன்றில், அதிமுக ஒன்றிய செயலர் ஒருவர் வீட்டில் பண மூட்டைகள் புதைத்து வைக்கப்பட்டுள்ளதாக எழுதப்பட்டுள்ளதாம்.. இது தொடர்பாகவும் விசாரிக்கப்பட்டு வருவதாக வருமான வரித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஆட்டோ சங்கர் பாணியில்...
அதுவும் சென்னையில் 1980களில் பெண்களை கொலை செய்து தமது வீட்டு சுவரில் புதைத்து வைத்த ஆட்டோ சங்கர் பாணியில் பண மூட்டைகளை பாதுகாப்பாக அந்த ஒன்றிய செயலர் வீட்டுச் சுவரில் புதைத்து வைத்திருக்கலாம் எனவும் வருமான வரித்துறையினர் சந்தேகிக்கின்றனர். அந்த ஒன்றிய செயலர் கரூர் மாவட்டத்தைச் சேர்ந்தவரா? அல்லது திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்தவரா? என்பது குறித்தும் தீவிரமாக விசாரிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.