நியாயமா.. 55 ஆயிரம் ஐடி ஊழியர்கள் கூண்டோடு பணி நீக்கம்… தொழிலாளர் நல ஆணையத்திடம் பரபர புகார்
முன்னறிப்பு எதுவும் இன்றி 55 ஆயிரம் பேர் கூண்டோடு பணி நீக்கம் செய்யப்பட உள்ளதாக ஐடி ஊழியர்கள் தொழிலாளர் நல ஆணையத்திடம் புகார் அளித்துள்ளனர்.
சென்னை: எந்த வித முன் அறிவிப்பும் இன்றி பல்வேறு ஐ.டி. நிறுவனங்களில் பணி புரியும் 55 ஆயிரம் பேர் பணி நீக்கம் செய்யப்பட உள்ளதாக தொழிலாளர் நல ஆணையத்திடம் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.
இன்ஃபோசிஸ், சி.டி.எஸ்., விப்ரோ, டெக் மகேந்திரா உள்ளிட்ட பல்வேறு ஐ.டி. நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்நிறுவனங்களில் திடீர் திடீரென ஊழியர்களை வீட்டுக்கு அனுப்புவது வழக்கமாகிவிட்டது. நீண்ட நாட்களாகவே இருந்து வந்த இந்தப் பிரச்சனை தற்போது பூதாகரமாக உருவெடுத்துள்ளது.
தமிழகத்தில் உள்ள இன்ஃபோசிஸ், சி.டி.எஸ்., விப்ரோ, டெக் மகேந்திரா ஆகிய நிறுவனங்களில் பணிபுரியும் 55 ஆயிரம் பேரை நீக்க முடிவு செய்துள்ளன. இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள ஐ.டி. ஊழியர்கள், சென்னையில் தொழிலாளர் நல ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்துள்ளனர்.
ஐ.டி. ஊழியர்களின் பிரதிநிதிகள் அளித்துள்ள புகார் மனுவில், எந்தவித முன்னறிவிப்பும் இன்றி பணியில் இருந்து மென்பொருள் பொறியாளர்கள் நீக்கப்படுவதாகவும், சென்னையில் மட்டும் ஐந்தாயிரம் பொறியாளர்களை காக்னிசன்ட் நிறுவனம் ஏற்கனவே நீக்கிவிட்டதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
ஐ.டி. நிறுவனங்களின் சட்டவிரோத பணி நீக்க நடவடிக்கையை தடுக்க வேண்டும் என்றும் அரசிடம் ஐ.டி. ஊழியர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். ஒரே நேரத்தில் 55 ஆயிரம் பேர் திடீரென்று வேலையை விட்டு அனுப்பும் முடிவு ஐ.டி. துறையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.