ஐடி நிறுவன ஊழியர்கள் வாக்களிக்க இடையூறு கூடாது: தலைமை தேர்தல் அதிகாரி பேட்டி
சென்னை: ஐடி துறையில் வேலை பார்க்கும் ஊழியர்களை தேர்தல் நாளில் வெளியூர்களுக்கு பணியாற்ற அனுப்ப கூடாது என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி கேட்டுக்கொண்டுள்ளார்.
தமிழ்நாட்டில் சட்டசபை தேர்தல் ஏற்பாடுகள் குறித்து தலைமை தேர்தல் கமிஷனர் நஜீம் ஜைதி வீடியோ கான்பரன்ஸ் மூலம் ஆலோசனை நடத்தி வருகிறார். சென்னை உள்பட 16 மாவட்டங்களில் செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் பற்றி அவர் ஆலோசித்தார்.
இன்று 2வது நாளாகவும் தேர்தல் கமிஷனர் நஜீம் ஜைதி காணொலி காட்சி மூலம் தமிழக அதிகாரிகளுடன் பேசினார். இதில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி, தலைமை செயலாளர் உள்துறை செயலாளர் டி.ஜி.பி. வருமான வரித்துறை இயக்குனர், மதுவிலக்கு அமலாக்க துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.
பின்னர் ராஜேஷ் லக்கானி நிருபர்களிடம் கூறியதாவது:
பூத் ஸ்லிப் வழங்கும் பணி இன்றோடு முடிவடைகிறது. ஸ்லிப் இல்லாதவர்கள், ஆதார் அட்டை, டிரைவிங் லைசென்ஸ் உள்ளிட்ட பிற ஆவணங்களை காண்பித்தும் வாக்களிக்கலாம்
வாக்குச்சாவடி எங்குள்ளது என்பதை 1950 என்ற எண்ணுக்கு எஸ்.எம்.எஸ். அனுப்பி வாக்காளர்கள் அறிந்து கொள்ள வசதி செய்யப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்க வசதியாக, சரிவு மேடைகள் உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டுள்ளன. எல்லா தொகுதிகளிலும், மகளிர் வாக்குச்சாவடிகளும் அமைக்கப்பட்டுள்ளன.
தேர்தலையொட்டி 14ம் தேதி முதல் 16ம் தேதி வரையிலும் மற்றும் 19ம் தேதியும் டாஸ்மாக் கடைகள் அடைக்கப்படும். புதுச்சேரி, கேரளாவிலும் தேர்தல் நடைபெறுவதால் அங்கும் மதுபான கடைகள் மூடப்பட்டிருக்கும்.
தமிழகத்தில் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை தடுக்க தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறோம்.
ஒரு தொகுதிக்கு 25 பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது. இவர்கள் ஒரு ஷிப்டுக்கு 25 பேர் வீதம் 3 ஷிப்ட்களில் பணியாற்றுவார்கள்.
வரும் திங்கள்கிழமை வாக்குப்பதிவு தினத்தன்று, பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஐடி நிறுவனங்களில் பணியாற்றுவோரும் திரளாக வாக்களிக்க வேண்டும். ஐடி ஊழியர்களை வெளியூர்களுக்கு பணி நிமித்தம் அனுப்பி வைப்பதை நிறுவனங்கள் அன்றைய தினம் தவிர்க்க வேண்டும். இவ்வாறு ராஜேஷ் லக்கானி கூறினார்.