அப்படி ஒன்னும் நிறைய இல்லை எங்கள் வீட்டில்.. ஐடி இதைத்தான் கண்டுபிடித்தது.. ராம்மோகன் ராவ்
ஒரு லட்சத்து 12 ஆயிரத்து 320 ரூபாய்தான் வருமானவரித் துறை சோதனையின் போது எடுக்கப்பட்டது என்று ராம்மோகன் ராவ் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
சென்னை: வருமானவரித் துறையினரின் சோதனையின் போரு ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பணம் மற்றும் பயன்படுத்திக் கொண்டிருந்த தங்கம் மற்றும் வெள்ளிப் பொருட்கள் கண்டுபிடித்ததாக வருமானவரித் துறையினர் கூறியுள்ளனர் என்று முன்னாள் தலைமைச் செயலாளர் ராம்மோகன் ராவ் தெரிவித்துள்ளார்.
கடந்த வாரம் முன்னாள் தலைமைச் செயலாளர் ராம்மோகன் ராவ் வீடு மற்றும் அலுவலகங்கள் வருமானவரித் துறையினரால் சோதனை மேற்கொள்ளப்பட்டது. மேலும், கோடிக்கணக்கில் பணம் பதுக்கி உள்ள சேகர் ரெட்டியின் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையின் போது கிடைத்த ஆவணங்களின் அடிப்படையில் ராம்மோகன் ராவ் வீடு சோதனை செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த ராம்மோகன் ராவ், விடியற்காலை 5.30 மணிக்கு வீட்டிற்கு வந்த வருமானவரித் துறையினர், தனது மகள் மற்றும் மனைவிக்கு சொந்தமான 50 சவரன் நகைகளைப் கைப்பற்றியுள்ளனர் என்று கூறியுள்ளார். மேலும் ஒரு லட்சத்து 12 ஆயிரத்து 320 ரூபாய் ரொக்கமும், வெள்ளியால் செய்யப்பட்ட விநாயகர் சிலை, மகாலட்சுமி சிலை, வெங்கடேஸ்வரா சிலைகளை வருமானவரித் துறையினர் கைப்பற்றியுள்ளனர் என்றும், இந்த சிலைகள் உள்பட பயன்பாட்டில் இருந்த 25 கிலோ வெள்ளி பொருட்களை வருமானவரித் துறையினர் கண்டுபிடித்துள்ளதாக தெரிவித்துள்ளனர் என்றும் ராம்மோகன் ராவ் கூறினார்.
மேலும், ஆவணங்கள் எதுவும் தன்னிடம் இல்லை என்றும், அதனால் ஆவணங்கள் எதனையும் வருமானவரித் துறையினர் கைப்பற்றவில்லை என்றும் ராம்மோகன் ராவ் மறுத்துள்ளார். ரகசிய அறைகள் எதுவும் தன் வீட்டில் இல்லை என்றும் அவர் விளக்கம் அளித்துள்ளார்.