பட்டதெல்லாம் போதும். முதல்வர் பதவி உங்களுக்கு வேண்டாம்.. ஓ.பி.எஸ்சுக்கு ஆதரவாளர்கள் நெருக்கடி
சசிகலாவை பொதுச் செயலாளராக முன்மொழிந்து விட்டு ஓ.பன்னீர் செல்வம் பட்ட அவஸ்தைகள் போதும். அதிமுக இணைவின்போது மீண்டும் வேறு ஒருவரை நியமித்துவிட்டு அதே தவறை செய்யாதீர்கள் என நிர்பந்திக்கிறார்கள் அவரின் ஆ
சென்னை: அதிமுக பொதுச் செயலாளர் பதவியை சசிகலாவுக்கு தூக்கிக் கொடுத்ததால், தமிழகத்தில் ஏராளமான குழப்பம் ஏற்பட்டுள்ளது. மீண்டும் அப்பதவியை வேறு யாருக்கும் கொடுக்காமல் அவரே வைத்துக் கொண்டால் கட்சி கட்டுக்கோப்பாக இருக்கும் என்பதில் ஐயமில்லை என்கிறார்கள் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள்.
எடப்பாடி பழனிச்சாமிக்கு அதிமுக பொதுச்செயலாளர் பதவியும், பன்னீர்செல்வத்திற்கு முதல்வர் பதவியும் பெறுவது தொடர்பாக பேச்சுவார்த்தை நடப்பதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், இவ்வாறு கூறுகிறார்கள் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள்.
ஜெயலலிதா மறைந்தவுடன் அவசர அவசரமாக முதல்வர் பதவியை ஓபிஎஸ் ஏற்றுக் கொண்டார். பின்னர் ஜல்லிக்கட்டு, வார்தா புயல், எண்ணூர் கடலில் எண்ணெய் கசிவை நேரில் சென்று ஆய்வு செய்தது உள்ளிட்ட காரணங்களால் மக்கள் மத்தியிலும், மத்திய அரசிலும் ஓபிஎஸ் நன்மதிப்பை பெற்றார்.
மேலும் வேண்டாம் வேண்டாம் என்று கூறியே கட்சியை முழுவதுமாக தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்த சசிகலா, முதல்வர் படம் பாணியில் ஒரு நாளாவது முதல்வர் பதவியிலிருந்து இருந்து விட ஆசை இருந்தது.
ஆதரவாளர்கள் மூலம் குடைச்சல்
முதல்வராக உள்ள பன்னீர் செல்வம் தானாகவே ராஜினாமா செய்ய வைப்பதற்காக அவரை எந்த அளவுக்கு அவமானப்படுத்த முடியுமோ அந்த அளவுக்கு மூத்த நிர்வாகிகளும், அமைச்சர்களும், ஏன் சசிகலாவும் செய்தனர். கட்சியும், ஆட்சியும் ஒருவரின் கையில் இருக்க வேண்டும், அதுவும் சசிகலா கையில்தான் இருக்க வேண்டும் என்று அத்தனை பேரையும் தூண்டி விட்டார் சசிகலா. பின்னர் அவர்களும் முதல்வராக இருந்த ஓபிஎஸ்ஸுக்கு எதிராக எத்தனை பேட்டிகள், எத்தனை குடைச்சல்கள் அப்பப்பா.
பொறுத்தார் பூமி ஆள்வார்
இத்தனை சோதனைகளையும் தனக்கே உரிதான புன்முறுவலுடன் தாங்கிக் கொண்டார் ஓபிஎஸ். ஒரு நாள் திடீரென முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் ஓபிஎஸ். பின்னர் சட்டசபைக் குழுத் தலைவராக அனைவராலும் சசிகலா தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்நிலையில் எரிமலை வெடித்தது போல், திடீரென ஜெயலலிதா சமாதியில் தியானம் மேற்கொண்ட ஓபிஎஸ் பொங்கி எழுந்தார். சசிகலா தரப்பு நிர்பந்தித்ததால்தான் பதவியை ராஜினாமா செய்தேன். மக்கள் விரும்பினால் ராஜினாமா கடிதத்தை திரும்பப் பெற தயார் என்றார். இது நடிப்போ, உண்மையோ, ஆனால் அவர் மீது பொதுமக்களுக்கு கரிசனம் அதிகரித்தது.
ஆக்கிரோஷ சசிகலா
கடந்த 33 ஆண்டுகளாக சசிகலாவின் குரலை கூட இந்நாட்டு மக்கள் கேட்காத நிலையில் முன்னாள் அமைச்சர் வளர்மதி கூறியது போல் அதிமுக பொதுச் செயலாளராக பொறுப்பேற்றபோது தேன் கலந்து குரலில் சசிகலா பேசினார். அத்தோடு சிரித்த முகமாகவே இருந்த சசிகலா மெல்ல மெல்ல ஜெயலலிதா பாணியில் மாறிவிட்டார். ஓபிஎஸ் பேட்டி கொடுத்ததுதான் தாமதம் போயஸ் கார்டனில் பதில் பேட்டி கொடுத்து அவர் மீது ஒழுங்கு முறை நடவடிக்கை எடுத்ததாக சசிகலா அறிவித்த போது எத்தனை கோபம் அவரது முகத்தில். இதன்பின்னர் அதிமுகவில் பிளவு, சொத்துக் குவிப்பு வழக்கில் சசிக்கு சிறை, தினகரன் நியமனம், நம்பிக்கை வாக்கெடுப்பு, எடப்பாடி பழனிச்சாமி முதல்வர் என்று இத்தனை சம்பவங்கள் நடந்தேறிவிட்டன.
அதிமுக இணைவு
இந்நிலையில் அதிமுக இணைவு குறித்த பேச்சுவார்த்தையில் தினகரன் ஓரங்கட்டப்பட்டு முதல்வர், பொதுச் செயலாளர் பதவி யாருக்கு என்று கேள்வி எழுந்துள்ளது. சசிகலாவுக்காக ஓபிஎஸ்ஸை அவமானப்படுத்தியவர்கள் இன்று ஓபிஎஸ்ஸை தூக்கி வைத்து கொண்டாடுகிறார்கள். சசிகலா, தினகரன் அவரவர் பதவியில் நீடிப்பர் என்று அவர்களுக்கு விசுவாசமாக இருந்த இவர்கள் இன்று அவர்களையே ஒதுக்கி வைக்கும் முடிவுக்கு சென்றுவிட்டனர். இரட்டை இலை காப்பற்காகதான் என்று கூறினாலும் எந்த தைரியத்தில் தேர்தல் ஆணையத்திடம்இவர்கள் முறையிட்டனர் என்பதை யோசிக்க வேண்டும். சசிகலா பேச்சை கேட்டு ஜெயலலிதாவால் அடையாளம் காட்டப்பட்ட ஓபிஎஸ்ஸை எதிர்த்தனர், இன்று ஓபிஎஸ் சொல் பேச்சு கேட்டு சசிகலாவை எதிர்க்கும் இவர்களுக்கு பொதுச் செயலாளர் பதவி சென்றால் கட்சி என்னாவாகும் என்று யோசிக்க வேண்டும். ஒரு நிலைப்பாட்டில் முழுமையாக 6 மாதங்கள் கூட நீடிக்க முடியாத இவர்களை நம்பி பொதுச் செயலாளர் பதவியை ஓபிஎஸ் அணியினர் விட்டுகொடுத்தார்களேயானால் நாளை இரட்டை இலை சின்னம் கிடைத்தவுடன் ஓபிஎஸ் அணியினரை கவிழ்க்க மாட்டார்கள் என்பது என்ன நிச்சயம்.
முதல்வர் பதவி வேண்டாம் ஓபிஎஸ்
முதல்வர் பதவி என்பது இன்னும் 4 அல்லது மூன்றரை ஆண்டுகள் உள்ள ஒரு தற்காலிக பதவி. ஆனால் பொதுச் செயலாளர் பதவி என்பது அப்படி அல்ல. கட்சியை ஜெயலலிதா போல் ராணுவ கட்டுகோபபுடன் நடத்தி சென்றால், அவரை போல் புதியவர்களுக்கு தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பு கொடுத்தால், பணத்துக்காக எம்எல்ஏ, எம்பி சீட்டுகளை விற்காமல் இருந்தால், மூன்றாவது நபர் சொல் கேட்டு நிர்வாகிகள் நியமனம், தேர்தல் பணிகள் செய்யாமல் இருந்தால் விசுவாசிகளுக்கு மதிப்பு கொடுத்தால் ஜெ.வை போல் நிரந்தர பொதுச் செயலாளராக ஓபிஎஸ் தொடருவார் என்பதில் சந்தேகமில்லை.
பொதுச் செயலாளர் பதவியை கேளுங்க
எனவே எடப்பாடி அணியினரின் குடுமியை தன் கையில் வைத்திருக்க ஓபிஎஸ் பொதுச் செயலாளர் பதவியை கேட்டு பெறுவதே சால சிறந்தது. தற்காலிக முதல்வர் பதவிக்கு ஆசைபட்டாரேயானால் 4 ஆண்டுகள் கழித்து சசிகலா குடும்பத்தினரின் கையில் அதிமுக சிக்க வாய்ப்புள்ளதாக கூறுகிறார்கள் ஓ.பி.எஸ் ஆதரவாளர்கள். இவர்களால் இரட்டை இலை காணாமல் போன மாதிரி , அதிமுகவும் காணாமல் போகாது என்று என்ன உத்தரவாதம் என்கிறார்கள் அவர்கள். சசிகலா ஒருமுறை பொதுச் செயலாளராக அறிவித்து விட்டு பட்டதுபோதும் ஓபிஎஸ் சார். மீண்டும் வேறு ஒருவருக்கு அப்பதவியை வழங்கி இதுபோன்ற சிக்கலில் மாட்டி கொள்ள கூடாது என்பதே ஓபிஎஸ், நலவிரும்பிகளின் விருப்பமாகும்.