மழையால் தாழ்வான பகுதிகளில் இயற்கையாகவே தண்ணீர் தேங்குகிறது- அமைச்சர் உதயகுமார்
பேரிடர் காலங்களில் மக்கள் பாதிக்கப்படாமல் இருக்க அரசு தீவிர கவனம் செலுத்துவதாக அமைச்சர் உதயகுமார் கூறியுள்ளார்.
சென்னை: தாழ்வான பகுதிகளில் இயற்கையாகவே தண்ணீர் தேங்குகிறது வருவாய்த்துறை என்று அமைச்சர் உதயகுமார் கூறியுள்ளார். மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் விரைவாக நடைபெறுகிறது என்றும் அவர் கூறியுள்ளார்.
மழை, வெள்ள பாதிப்புகள் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர் பேரிடர் காலங்களில் மக்கள் பாதிக்கப்படாமல் இருக்க அரசு தீவிர கவனம் செலுத்துவதாக தெரிவித்தார்.
வெள்ளம் பாதிக்கும் 4500 இடங்கள் கண்டறியப்பட்டு மீட்புக்குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். வருவாய் மாவட்டங்களில் அதிகாரிகள் கண்காணிப்பு பணியில் உள்ளனர்.
தாழ்வான பகுதிகளில் இயற்கையாகவே தண்ணீர் தேங்குவதாக குறிப்பிட்ட அமைச்சர், 600 தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தியிருப்பதாக கூறினார். கடந்த கால அனுபவங்களின் அடிப்படையில் விரைந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டார்.
தாழ்வான பகுதிகளில் உள்ள மக்களை நிவாரண முகாம்களில் தங்க வைக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார். பருவமழை பாதிப்புகளை சரி செய்ய அரசு துரிதகதியில் செயல்பட்டு வருவதாகவும் கூறினார். கடலோர மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டு வருவதாக குறிப்பிட்டார்.
கடலோர மாவட்டங்களில் 578 பகுதிகள் மிகவும் தாழ்வானவை என்றார். டிசம்பர் மாதம் வரை வடகிழக்கு பருவமழைக்காலம் என்பதால், முன்னேற்பாடுகள் முறையாக செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.