ஜெயா டிவி சிஇஓ விவேக் வீட்டின் தண்ணீர் தொட்டியையும் அலசிய ஐடி அதிகாரிகள்!
ஜெயா டிவி சிஇஓ விவேக் வீட்டின் தண்ணீர் தொட்டியையும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.
Recommended Video
சென்னை: ஜெயா டிவி சிஇஓ விவேக் வீட்டின் தண்ணீர் தொட்டியையும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.
சசிகலாவின் குடும்பத்தினர் மற்றும் அவர்களுக்கு சொந்தமான நிறுவனங்களிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர். ஜெயா டிவி, நமது எம்ஜிஆர் மற்றும் சசிகலா குடும்பத்திற்கு சொந்தமான மிடாஸ் மதுபான ஆலையில் சோதனை நடைபெற்று வருகிறது.
வரி ஏய்ப்பு மற்றும் கறுப்புப்பண ஒழிப்புக்காக இந்த சோதனை நடைபெறுவதாக வருமான வரித்துறையினர் தெரிவித்துள்ளனர். சசிகலாவுக்கு தொடர்புடைய 190 இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.
காலை 5.30 மணியிலிருந்து
ஜெயா டிவியின் சிஇஓவான விவேக் வீட்டிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் ரெய்டு நடத்தி வருகின்றனர். சென்னை கோடம்பாக்கம் மகாலிங்கப்புரத்தில் உள்ள விவேக்கின் வீட்டிற்கு காலை 5.30 மணிக்கு வருமான வரித்துறை அதிகாரிகள் சென்றுள்ளனர்.
வங்கிக்கணக்கு, பரிவர்த்தனை..
அதிகாரிகள் ஒவ்வொரு அறையாக சோதனை செய்து வருகின்றனர். வங்கிக் கணக்கு மற்றும் பணப்பரிவர்த்தனைகள் குறித்தும் அதிகாரிகள் ஆய்வு நடத்தி வருகின்றனர்.
மொட்டை மாடி தண்ணீர் தொட்டியிலும்..
விவேக் வீட்டின் மொட்டை மாடியில் உள்ள தண்ணீர் தொட்டியிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். காவலர்கள் மற்றும் துப்பாக்கி ஏந்திய காவலர்கள் விவேக்கின் வீட்டின் முன்பு குவிக்கப்பட்டுள்ளனர்.
சசிகலாவின் அண்ணன் மகன்
சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவின் அண்ணி இளவரசியின் மகன் விவேக். இவர் தற்போது ஜெயா டிவியை நிர்வகித்து வருவது குறிப்பிடத்தக்கது.
விவேக்கின் சொகுசு கார்களில்..
சென்னை மகாலிங்கப்புரத்தில் உள்ள விவேக்கின் வீட்டில் சோதனை நடத்தும் அதிகாரிகள் அவரது கார்களிலும் ஆய்வு செய்துள்ளனர். விவேக்குக்கு சொந்தமான ஜாக்குவார், பென்ஸ், மினிகூப்பர், ஷிப்ட் ஆகிய 4 சொகுசு கார்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.