ராமமோகன் ராவ் வீடு, தலைமை செயலகத்தில் ரெய்டுக்கு இதுதான் காரணம்... வருமான வரித்துறை விளக்கம்
சேகர்ரெட்டி, ராமமோகன் ராவ் இடையேயான தொழில் தொடர்புகளுக்கு ஆதாரங்கள் இருக்கின்றன. இதனடிப்படையில்தான் சோதனை நடத்தியதாக வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சென்னை: தமிழக அரசின் முன்னாள் தலைமை செயலர் ராமமோகன் ராவ் வீடு மற்றும் தலைமை செயலகத்தில் சட்டப்படியும் உரிய அனுமதியுடனுமே சோதனை நடத்தப்பட்டதாக வருமான வரித்துறை அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.
தமிழகத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனைகளை நடத்தி வருகின்றனர். வழக்கமாக இதுபோன்ற சோதனைகள் நடைபெறும் போது வருமான வரித்துறை சார்பில் அதிகாரப்பூர்வமாக அறிக்கை கொடுக்கப்படும்.
ஆனால் அண்மைக்காலமாக தமிழகத்தில் நடத்தப்படும் சோதனைகள் தொடர்பாக வருமான வரித்துறை அதிகாரப்பூர்வமாக அறிக்கை எதுவும் வெளியிடவில்லை. தற்போது முன்னாள் தலைமை செயலர் ராமமோகன் ராவ் தம்முடைய வீட்டில் சோதனை நடத்தப்பட்டது ஏன் என கேள்வி எழுப்பியுள்ளார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இருந்தபோதும் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிகாரப்பூர்வமாக விளக்கம் அளிக்கவில்லை. வருமான வரித்துறை சார்பில் அதிகாரப்பூர்வமற்ற வகையில் தெரிவிக்கப்பட்ட விளக்கம்:
ஆதாரங்கள் உள்ளன...
முன்னாள் தலைமைச் செயலாளர் ராமமோகன் ராவின் வீடு, திருவான்மியூரில் உள்ள அவருடைய மகன் விவேக் உள்ளிட்டோர் வீடுகளில் உரிய சட்ட விதிகளின் படியே சோதனை நடத்தப்பட்டது. சேகர்ரெட்டி மற்றும் ராமமோகன் ராவ், அவருடைய மகன் விவேக் இடையேயான தொழில் தொடர்புகள் குறித்து போதிய ஆதாரங்கள் உள்ளன. இந்த ஆதாரங்கள் அடிப்படையிலேயே சோதனை நடத்தப்பட்டது.
ஒருவர் பெயரே போதும்...
வருமானவரித்துறை சட்டப் பிரிவு 132ன் படியே இந்த சோதனை நடத்தப்பட்டது. சோதனைக்காக விவேக் பெயரில் வாரண்ட் பெறப்பட்டு அவருடைய தந்தை என்பதால் ராமமோகன் ராவ் வீடு உள்ளிட்ட இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. சோதனைக்கான வாரண்ட்டில் ஒருவர் பெயர் இருந்தால் மட்டுமே போதும்.
துணை ராணுவம் பயன்படுத்தலாம்
வருமான வரி சோதனையின் போது துணை ராணுவத்தை பயன்படுத்த கூடாது என எந்த ஒரு விதியும் இல்லை. ராமமோகன் ராவ் வீட்டிலும், தமிழக அரசின் தலைமைச்செயலகத்திலும் சோதனை நடத்த முறையான அனுமதி பெறப்பட்டது.
அனுமதி பெறப்பட்டது
தலைமைச் செயலகத்தில் உள்ள ராமமோகன ராவின் அலுவலகத்தில் பணியாளர் நலத்துறை செயலர் சிவ்தாஸ் மீனாவிடம் அனுமதி பெற்ற பின்னரே நடத்தப்பட்டது. அங்கு ராமமோகன் ராவின் செல்போன்களை எடுக்கவே சோதனை நடத்தப்பட்டது.
இவ்வாறு வருமான வரித்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.