நாளை முதல் அதிரடி ரெய்டு... 150 அதிகாரிகளுடன் வருமான வரித்துறை அலுவலகத்தில் ஆலோசனை!
வருமான வரித்துறையினர் நாளை முதல் தமிழகத்தில் அதிரடி ரெய்டுகளைத் தொடங்கவுள்ளனர். இதுதொடர்பான முக்கிய ஆலோசனை இன்று சென்னையில் நடந்தது.
சென்னை: சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமான வரித்துறை அலுவலகத்தில் இன்று 60க்கும் மேற்பட்ட அதிகாரிகளுடன் வருமான வரி புலனாய்வுப் பிரிவு இயக்குநர் பவன் குமார் தலைமையில் தீவிர ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
இந்தக் கூட்டத்தில் அடுத்தடுத்து எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டதாகவும், அடுத்த கட்ட ரெய்டு குறித்து பேசப்பட்டதாகவும் பரவலாக பேசப்படுகிறது. மேலும் நாளை முதல் வருமான வரி சோதனைகள் முடுக்கி விடப்படும் என்று ஏற்கனவே தகவல்கள் கூறுவதால் நாளை முதல் நடைபெறப் போகும் அதிரடி ரெய்டுகளில் சிக்கப் போவது யார் என்ற பரபரப்பு அதிகரித்துள்ளது.
இன்று நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் முக்கியமாக ஹைதராபாத்திலிருந்து வந்துள்ள 60க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் மற்றும் உள்ளூர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். கிட்டத்தட்ட 150 அதிகாரிகள் கலந்து கொண்டதாக கூறப்படுகிறது.
நாளை முதல் இவர்கள் எங்கெங்கு ரெய்டு நடத்த வேண்டும் என்ற அசைன்மென்ட் குறித்து விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. ரெய்டின்போது மேற்கொள்ளப்பட வேண்டிய வழிமுறைகள் குறித்தும் அவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. நாளை முதல் ரெய்டு நடத்தப்பட வேண்டிய இடங்கள் குறித்த பட்டியலும அவர்களுடன் பகிர்ந்து கொள்ளப்பட்டதாகவும் கூறப்படுகிறது.