சென்னை பர்வீன் டிராவல்ஸ் அலுவலகங்களில் வருமான வரி சோதனை.. ஊழியர்களுக்கு அனுமதி மறுப்பு
சென்னை: சென்னையில் உள்ள பிரபல பர்வீன் டிராவல்ஸ் அலுவலகத்தில் ஐடி ரெய்டு நடந்து வருகிறது.
பர்வீன் டிராவல்ஸ் பல்வேறு நகரங்களுக்கும் பஸ்களை இயக்கி வருகிறது. இந்த நிலையில் சென்னை மாதவரத்தில் உள்ள டிராவல்சின் தலைமை அலுவலகத்திலும், செங்குன்றம், புரசைவாக்கத்தில் உள்ள அலுவலகத்திலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
கடந்த 3 நாட்களாகவே இந்த சோதனை நடக்கிறதாம். ஊழியர்கள் யாருமே அலுவலகங்கங்களுக்குள் அனுமதிக்கப்படாமல் சோதனை நடைபெற்று வருகிறது.
வரி ஏய்ப்பு செய்ததாகவோ, வரி மோசடி செய்ததாகவோ, இந்த சோதனை நடைபெறவில்லை. பெரிய நிறுவனங்களில் திடீரென வருமான வரித்துறை அதிகாரிகள் ஆவணங்களை சோதனை நடத்துவார்கள். அந்த அடிப்படையில்தான் பர்வீன் டிராவல்ஸ் நிறுவனத்திலும் சோதனை நடைபெற்று வருகிறது.
ஒவ்வொரு இடத்திலும் 15க்கும் மேற்பட்ட அதிகாரிகள், கணக்கு வழக்கு ஆவணங்களை சரி பார்த்து வருகின்றனர். எனவே இது வரி ஏய்ப்பு கண்டுபிடிக்கப்பட்டு நடத்தப்படும் ரெய்டு இல்லை என்றும், கணக்கு தணிக்கைதான் பார்க்கப்படுகிறது என்றும் அந்த டிராவல்ஸ் தரப்பில் தெரிவிக்கிறார்கள்.