என்னதான் விசாரித்தாலும் சரத்குமார் - ராதிகாவிடம் எதுவும் சிக்கலியே... திணறும் ஐடி!
சென்னை: ஏதேதோ கணக்குகள் போட்டு சரத்குமார் மற்றும் ராதிகாவை தோண்டித் துருவி விசாரித்தாலும், உண்மையில் அவர்கள் கைகளுக்கு பணம் எதுவும் கிடைத்தபாடில்லை என தகவல்கள் கிடைத்துள்ளன.
அதிமுகவில் தினகரனுக்கு ஆதரவாக சரத்குமார் ஆர்கே நகரில் பிரச்சாரம் செய்யப் போகிறார் என்ற தகவல் வெளியான 24 மணி நேரத்துக்குள் அவர் வீடு அலுவலகங்களில் அதிரடி சோதனையில் இறங்கியது வருமான வரித்துறை. தொடர்ந்து தமிழக அமைச்சர்கள், அதிகாரிகள் வீடுகளிலும் சோதனை. அடுத்த 24 மணி நேரத்தில் தேர்தல் ரத்து அறிவிப்பு வெளியாகிவிட்டது.
தேர்தல் ரத்து அறிவிப்பு வெளியான பிறகும் ஐடி அதிகாரிகள் சோதனை நிற்கவில்லை. குறிப்பாக சரத்குமார் மற்றும் அவர் மனைவி ராதிகா மற்றும் அவரது நிறுவனங்களில்.
இந்த தொடர் சோதனையில் கடைசி வரை சரத்குமார் வாங்கியதாக மீடியாக்களில் உலா வரும் ரூ 7 கோடி தொகை மட்டும் சிக்கவே இல்லையாம். இதுதான் வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது.
தங்களிடம் பிரச்சாரத்துக்கு பேரம் பேசிய சரத்குமார், திடீரென தினகரனிடம் ரூ 7 கோடி வாங்கிவிட்டார் என்ற தகவலை லோக்கல் பாஜகவினர் போட்டுக் கொடுத்ததாலேயே இந்த சோதனை சரத் மற்றும் ராதிகா வீடுகள், அலுவலகங்களில் நடந்ததாகக் கூறப்படுகிறது. ஆனால் அப்படி நடந்த சோதனையில் எதிர்ப்பார்த்த எதுவுமே கிடைக்காததால், சரத்குமாரை தொடர்ந்து இரு தினங்களும், சரத் - ராதிகாவை கூட்டாக ஒரு நாளும் விசாரித்தனர். கேட்ட கேள்விகள் அனைத்துக்குமே தடுமாற்றமின்றி அவர்கள் அளித்த பதில், வருமான வரித்துறையினரை திகைக்க வைத்துள்ளது.
அதிகபட்சம் ராதிகாவின் ராடான் டிவி தரப்பில் சில கோடிகளுக்கு வரி ஏய்ப்பு சமாச்சாரங்கள் மட்டுமே கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாம். "இது ஒரு மேட்டரில்ல.. வரியைக் கட்டுவிட்டுப் போய்விடலாம். ஆனால் நான் தினகரனிடம் பணம் வாங்கினேன் என்பதற்கான எந்த ஆதாரத்தையும் அவர்களால் நிரூபிக்க முடியவில்லை. முழுக்க முழுக்க பாஜகவின் அரசியல் காழ்ப்பு நடவடிக்கை என்பதை அம்பலப்படுத்த ஒரு மணி நேரம் கூட தேவையில்லை. இனிமேல் இருக்கு கச்சேரி," என கர்ஜிக்கிறாராம் நாட்டாமை!
பாஜகவின் அரசியல் விளையாட்டுகளில் வருமான வரித்துறை மற்றும் சிபிஐ அதிகாரிகளின் மண்டை உருள்வதுதான் மோடி கண்ட ஒரே பலன்!