திருமணத்திற்கு மனைவிக்கு போட்ட நகையை பற்றி ஐடியில கேட்டாங்க- விவேக்
வருமானவரித்துறையினர் நடத்திய சோதனை, விசாரணை பற்றி ஜெயாடிவியின் சிஇஓ விவேக் ஜெயராமன் விளக்கம் அளித்துள்ளார்.
சென்னை: என் மனைவியின் திருமணத்திற்கு போட்ட நகைகள் பற்றி வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரித்தனர், நான் விளக்கம் அளித்து விட்டு வந்திருக்கிறேன் என்று ஜெயாடிவியின் தலைமை செயல் அதிகாரி விவேக் ஜெயராமன் கூறியுள்ளார்.
ஜெயாடிவி அலுவலகத்திலும், சிஇஒ விவேக் ஜெயராமன் வீட்டிலும் 5 நாட்களாக வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். சோதனைக்குப் பின்னர் கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் நேற்று 5 மணிநேரம் விவேக்கிடம் விசாரணை நடைபெற்றது.
இந்த சோதனை குறித்தும், வருமான வரித்துறை அதிகாரிகளின் விசாரணை பற்றியும் விவேக் இன்று தனது வீட்டில் செய்தியாளர்களுக்கு விளக்கம் அளித்தார்.
செய்தியாளர்களிடம் பேசிய விவேக், ஜாஸ் சினிமாஸ், ஜெயாடிவியை நான் நிர்வாகம் செய்து வருகிறேன். வருமான வரித்துறை அதிகாரிகள் எனது வீடு, ஜெயாடிவி அலுவலகத்தில் சோதனை மேற்கொண்டனர்.
எனது வீட்டில் திருமணத்திற்குப் பின்னர் மனைவிக்கு போட்ட நகைகளைப் பற்றி விசாரித்தனர். அந்த நகைகளுக்கு உரிய ஆவணங்களை வைத்திருக்கிறேன். மீண்டும் விசாரணைக்கு அழைப்பார்கள் அப்போது போய் ஆவணங்களை அளிப்பேன். எத்தனை முறை விசாரணைக்கு அழைத்தாலும் நான் போய் விளக்கம் அளிப்பேன்.
முறைகேடாக பணம் சம்பாதித்த யாராக இருந்தாலும் தப்பிக்க முடியாது. அது நானாக இருந்தாலும், அமைச்சராக இருந்தாலும் தப்பிக்க முடியாது என்று கூறினார் விவேக்.
வருமானவரித்துறை அதிகாரிகள் தங்களின் கடமையை செய்துள்ளனர். அவர்கள் கேட்ட கேள்விகளுக்கு நான் பதில் அளித்திருக்கிறேன். மீண்டும் விசாரணைக்கு அழைப்பார்கள். நான் செல்வேன்.
மழையில் 5 நாட்களாக மழை என்றும் பாராமல் காத்துக்கிடந்த செய்தியாளர்கள், நண்பர்களுக்கு நன்றி என்றும் கூறினார் விவேக் ஜெயராமன்.