பண விநியோகம்... அறந்தாங்கி அதிமுக வேட்பாளரின் தம்பி வீட்டில் "ஐடி" ரெய்டு!
அறந்தாங்கி: புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சட்டசபைத் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் ரெத்தினசபாபதியின் தம்பி மணமேல்குடி கார்த்திகேயனின் பண்ணை வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி ரெய்டு நடத்தியுள்ளனர்.
அறந்தாங்கி தொகுதியில் முன்னாள் மத்திய அமைச்சர் திருநாவுக்கரசரின் மகன் ராமச்சந்திரன் காங்கிரஸ் சார்பில் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்துப் போட்டியிடுபவர் அதிமுகவின் ரெத்தின சபாபதி. இவரது தம்பி கார்த்திகேயன். இவர் சசிகலா குடும்பத்தினருடன் நெருக்கமானவர். ஏற்கனவே மணல் திருட்டு வழக்கில் கைதாகி உள்ளே போய் வெளியே வந்தவர்.
இந்த நிலையில் தொகுதியில் பணத்தை அதிமுக தரப்பு வாரியிறைத்து வருகிறது. இதுதொடர்பாக திருநாவுக்கரசர் தேர்தல் ஆணையத்திற்கும், வருமான வரித்துறைக்கும் புகார் அளித்தார். இதன் பேரில் நேற்று வருமான வரித்துறையினர் அதிரடி நடவடிக்கையில் இறங்கினர்.
நேற்று மாலை கார்த்திகேயனின் பண்ணைவீடான பாளையப்பட்டு கிராமத்து வீட்டிலும், அவரது உதவியாளர் மணமேல்குடி பழனி வீட்டிலும் வருமான வரித்துறை அதிகாரி பால் ஜவகர் தலைமையில் சோதனையில் ஈடுபட்டனர். இதில் என்ன சிக்கியது என்ற விவரம் வெளியிடப்படவில்லை.
சமீபத்தில்தான் கரூரில் அதிமுக அமைச்சர்களுக்கு நெருக்கமானவரான அன்புநாதன் கிட்டங்கியில் பல கோடி அளவுக்கு பணம் சிக்கியது என்பது நினைவிருக்கலாம்.