திண்டுக்கல்லில் நத்தம் விஸ்வநாதனின் நண்பர், கல்லூரியில் ஐடி அதிகாரிகள் அதிரடி ரெய்டு!
திண்டுக்கல்: திண்டுக்கல்லில் அமைச்சர் நத்தம் விஸ்வநாதனின் நண்பர் மற்றும் நத்தம் பொறியியல் கல்லூரி ஆகியவற்றில் வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று அதிரடியாக சோதனை நடத்தினர்.
திண்டுக்கல் பேருந்து நிலையம் அருகேயுள்ள அரசு பணிகள் கான்ட்ராக்டர் பி.ஜனகர் என்பவரின் வீடு, கே.பி. கன்ஸ்ட்ரக்ஷன் மற்றும் திண்டுக்கல் அருகே நொச்சி ஓடைப்பட்டியில் உள்ள வீடு ஆகிய இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர். மொத்தம் 4 பிரிவுகளாகப் பிரிந்து வருமான வரித்துறை அதிகாரிகள் நடத்திய இந்த சோதனையில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது. கான்ட்ராக்டர் பி. ஜனகர், அமைச்சர் நத்தம் விஸ்வநாதனின் நெருங்கிய நண்பர் என கூறப்படுகிறது.
இதேபோல் நத்தத்தில் உள்ள என்.பி.ஆர். பொறியியல் கல்லூரியின் நிர்வாக அலுவலகத்திலும் ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. இந்த ஆவணங்களை எடுத்துக் கொண்டு அங்கிருந்த ஊழியர்களையும் அழைத்துக்கொண்டு நத்தத்தில் உள்ள என்.பி.ஆர். கல்லூரியிலும் சென்று அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
கரூர் அதிமுக பிரமுகர் அன்புநாதன் வீட்டில் பல கோடி ரூபாய் கைப்பற்றப்பட்ட நடவடிக்கையின் தொடர்ச்சியாக, இந்த சோதனை நடத்தப்பட்டதாக வருமானவரித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
நத்தத்தில் உள்ள என்.பி.ஆர். பொறியியல் கல்லூரியும் அமைச்சர் நத்தம் விஸ்வநாதனுக்கு சொந்தமானதாகவும் கூறப்படுகிறது.