நத்தம் விஸ்வநாதன், சைதை துரைசாமி மகன் வீடுகளில் 2வது நாளாக வருவமான வரி சோதனை- ஆவணங்கள் சிக்கின
மதுரை: மாஜி அமைச்சர் நத்தம் விஸ்வநாதன், மேயர் சைதை துரைசாமி மகன், வைர வியாபாரி கீர்த்திலால் வீட்டில் 2வது நாளாக சோதனை நடைபெற்றது. 3 பேரின் வீடு, அலுவலகங்கள், நிறுவனங்கள் என 40 இடங்களில் வருமான வரி அதிகாரிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். 24 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற சோதனையில் முக்கிய ஆவணங்கள், பல கோடி ரூபாய் பணம் சிக்கியதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
வருமான வரி ஏய்ப்பு செய்தது உள்ளிட்ட புகார்களை தொடர்ந்து சென்னை, மதுரை, கோவை, நெல்லை, திண்டுக்கல் ஆகிய பகுதிகளில் உள்ள 40 இடங்களில் பல்வேறு நிறுவனங்கள், நகைக் கடைகள், வீடுகள், அலுவலகங்கள் என ஏராளமான இடங்களில் வருமான வரித்துறையினர் நேற்று 9 மணி முதல் சோதனை நடைபெற்றது. இந்த சோதனை சோதனை இன்று அதிகாலை நிறைவடைந்ததாகவும் ஏராளமான ஆவணங்கள் சிக்கியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
சட்டசபை தேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன், கடந்த அ.தி.மு.க., ஆட்சியில், மின்சாரம் மற்றும் கலால் துறை அமைச்சராக இருந்த நத்தம் விஸ்வநாதனின் பதவி பறிக்கப்பட்டது. அவர், கட்சித் தலைமைக்கு தெரியாமல் சொத்து சேர்த்ததாக எழுந்த புகாரில், பதவியை இழந்ததாக கூறப்பட்டது.
தேர்தலிலும் அவர் வழக்கமாக போட்டியிடும் நத்தம் தொகுதியை தராமல், ஆத்துார் தொகுதி ஒதுக்கப்பட்டது; அவர் தோல்வி அடைந்தார். எனினும் தேர்தலுக்குப் பின் அவருக்கு, கட்சியின் அமைப்புச் செயலர் மற்றும் செய்தித் தொடர்பாளர் பதவிகள் கொடுக்கப்பட்டன.
இந்நிலையில், சில மாத இடைவெளிக்கு பின், நத்தம் விஸ்வநாதன் மற்றும் சென்னை மேயர் சைதை துரைசாமி ஆகியோரின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்தப்பட்டது. சென்னை, அடையாறில் உள்ள நத்தம் விஸ்வநாதனின் வீடு மற்றும் உறவினர் வீடுகள், நத்தம் விஸ்வநாதனின் சொந்த ஊரான திண்டுக்கல் மாவட்டம், வேம்பார்பட்டியில் உள்ள வீட்டிலும், நேற்று காலை துவங்கி விடிய விடிய நடந்த சோதனை இன்று அதிகாலையில் தான் நிறைவடைந்தது. இந்த சோதனையில் பல முக்கிய ஆவணங்கள் சிக்கியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சென்னை சேலையூர் அடுத்த மாடம்பாக்கத்தில் உள்ள மேயர் சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமியின் பண்ணை வீட்டிலும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். சில மாதங்களுக்கு முன்பு வெற்றி துரைசாமி, பல கோடி மதிப்புள்ள நிலம் வாங்கியதாகவும், அதில் முறைகேடு நடந்துள்ளதாகவும் புகார் எழுந்தது. வழிகாட்டு மதிப்புக்கு ஏற்ப முத்திரைத்தாள் வாங்கப்பட்டுள்ளதா, இந்த இடம் வாங்குவதற்கான பணம் எந்த வகையில் வந்தது என்பன தொடர்பாக விசாரணை நடத்தியதாக வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இதுதொடர்பாக, சென்னை தி.நகரில் உள்ள சைதை துரைசாமியின் வீடு மற்றும் அலுவலகங்களிலும் இன்று காலை வரை சோதனை நடத்தப்பட்டது.
சென்னை அபிராமபுரம், கோவை ஆகிய இடங்களில் உள்ள கீர்த்திலால் என்பவரின் நகைக்கடைகளிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். இதில் ஆவணங்கள், பணம் போன்றவை கைப்பற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.